பி.எப்., பென்சன், எல்.ஐ.சிக்கு வரி இல்லை!: மத்திய அரசு முடிவு
டெல்லி: இனி ஓய்வு பெற்றவர்களுக்கான பலன்கள், பிபிஎப், ஜிபிஎப், எல்ஐசி போன்றவற்றுக்கு நேரடி வரி விதிப்பதில்லை என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான புதிய மசோதா வரும் குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மத்திய அரசு தனது வரி வருமானத்தை பெருக்கும் நோக்கில் சிலவற்றுக்கு நேரடி வரி விதிக்க முடிவு செய்தது.
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி, ஆயுள் காப்பீட்டு நிறுவன நிதி, பென்சன் பணம், வீட்டு கடன் ஆகியவற்றிற்குத் தான் நேரடி வரி விதிக்க முடிவு செய்திருந்தது. இந்த வரி விதிப்பு நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் என்பதால் இப்போது இம் முடிவை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது.
இதை போன்று நீண்ட காலம் வருமானம் தரும் சொத்துக்களுக்கு அதன் வருமானத்துக்கு ஏற்ப ஆண்டிற்கு ஒருமுறை வரி விதிக்கும் திட்டமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சேமிப்புகள், தனிநபர் வருமானம், ஓய்வு கால பயன்கள், பென்சன் தொடர்பான வருமானம் ஆகியவைகளுக்கு விதிக்கப்படும் நேரடி வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவால் வீட்டுக் கடன்தாரர்கள், ஓய்வு பெறுவோர், பென்சன்தாரர்கள், ஆயுள் காப்பீட்டு கழகத்தில் பணம் செலுத்துவோர், வருங்கால வைப்புநிதி செலுத்துவோர் பயன் அடைவார்கள்.
மற்ற நேரடி வரி விதிப்புகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஆனால் வருமான வரி விதிப்புகளில் சிற்சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.
ஆண்டு வருமானத்தில் ஆண்களுக்கு ரூ.1.6 லட்சம் வரை வரி விதிப்பு இல்லை. பெண்களுக்கு ரூ.1.9 லட்சம் வரை வரி விதிப்பு இல்லை. ரூ.1.6 லட்சம் முதல், ரூ.10 லட்சம் வரை 10 சதவீதம் வரி விதிக்கப்படும். ரூ.10 லட்சத்தில் இருந்து 25 லட்சம் வரை 20 சதவீத வரி விதிக்கப்படும். ரூ.25 லட்சத்துக்கு மேற்பட்ட வருமானத்துக்கு 30 சதவீத வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது உள்ள 50 ஆண்டு பழமையான வரி விதிப்பு முறைகளை மாற்றி புதிய வரி விதிப்பு முறைகளை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதிய வரி விதிப்பு முறைகள் பாராளுமன்றத்தின் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.