குறைந்த வருவாய் பிரிவினருக்கு 4% வட்டியில் கல்விக் கடன்
டெல்லி: குறைந்த வருவாய்ப் பிரிவினரின் பிள்ளைகளும் உயர் கல்வி கற்பதற்கு ஏற்ப 4 சதவீத வட்டியில் வங்கிக் கடன் அளிக்க மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
ஜூன் 18-ம் தேதி டெல்லியில் நடைபெறும் மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் இது தொடர்பான இறுதி அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரூ. 4.5 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் கல்விக் கடனுக்கான வட்டி 4 சதவீதமாக நிர்ணயிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டு வருமானம் ரூ. 4.5 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் 7 சதவீத வட்டியில் கடன் வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட உள்ளது. அதிகபட்சம் ரூ. 12 லட்சம் வரை இந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கென தேசிய கல்வி நிதி கார்ப்பரேஷன் (என்இஎப்சி) எனும் தனி நிதி அமைப்பு ஒன்றை உருவாக்குவது பற்றியும் இக் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.
உயர் கல்வி கற்க மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த கடன் தொகையை திரும்பச் செலுத்தும் காலம் 12 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும்.
வங்கிக் கடன் பெற்று உயர் கல்வியை கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 9 சதவீதமாக உள்ளது. மேலும் ஏழை மாணவர்கள் வங்கிக் கடன் பெறுவதில் உள்ள சிக்கலைப் போக்க மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. வங்கிகள் கடனுக்கு ஈடாக சொத்துகளை கேட்பதால் ஏழை மாணவர்களுக்கு இந்த வசதி இன்னும் கிடைக்காமலே உள்ளது.
இப்போதும் 95 சதவீத அரசு வங்கிகள் பிணையம் இல்லாமல் கல்விக் கடன்களை வழங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.