தமிழ்நாடு பைனான்ஸ் அன்ட் இன்வஸ்ட்மென்ட்ஸ் மோசடி!
சென்னை: தமிழ்நாடு பைனான்ஸ் அன்ட் இன்வஸ்ட்மென்ட்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்த வாடிக்கையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் புகார் தரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக காவல்துறை பொருளாதார குற்றப்பிரிவு நேற்று வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழ்நாடு பைனான்ஸ் அன்ட் இன்வஸ்ட்மென்ட்ஸ் என்ற நிதி நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் முதலீடாக பொதுமக்களிடம் இருந்து பெற்று, முதிர்வு அடைந்தவுடன் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதன் பேரில் அந்த நிதி நிறுவனத்தின் மீது வடக்கு கடற்கரை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தற்போது பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்படி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பப் பெறாத முதலீட்டாளர்கள் எவரேனும் இருப்பின், அசல் முதலீடு சான்றுகளுடன் இச்செய்தி கிடைத்த இரண்டு வாரத்துக்குள் தங்கள் புகாரினை சென்னை அண்ணா நகரில் சி-48, 2-வது அவென்யூ என்ற முகவரியில் அமைந்துள்ள அலுவலகத்தில், பொருளாதார குற்றப்பிரிவு (2) காவல் ஆய்வாளரிடம் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.