எம்எல்ஏக்கள் கடத்தல், கட்சி மாறி ஓட்டு, விஜய் மல்லையா வெற்றி-சினிமாவை விஞ்சிய ராஜ்யசபா தேர்தல்...!
இந்தத் தேர்தலில் விஜய் மல்லையா போன்ற பண முதலைகள் வென்றுள்ளன.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், 56 ராஜ்யசபா பதவிகளுக்கான தேர்தல் நடந்தது.
தமிழகத்தில் காலியாக இருந்த 6 இடங்களுக்கு திமுக சார்பில் 3 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும் காங்கிரஸ் சார்பில் ஒருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
அதேபோல நாடு முழுவதும் 32 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், மீதமுள்ள 18 இடங்களுக்கு பல வேட்பாளர்கள் போட்டியிட்டதால் நேற்று தேர்தல் நடந்தது.
இதில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.
கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 4 காலி இடங்களுக்கு 5 பேர் போட்டியிட்டனர். பாஜக சார்பில் வெங்கையா நாயுடு, அயனூர் மஞ்சுநாத் ஆகியோரும் காங்கிரஸ் சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆஸ்கார் பெர்னாண்டஸ், டி.வி.மாருதி ஆகியோரும் சுயேச்சை வேட்பாளராக தொழிலதிபர் விஜய் மல்லையாவும் போட்டியிட்டனர்.
இதில் பாஜக வேட்பாளர்கள் இருவரும், காங்கிரசை சேர்ந்த ஆஸ்கார் பெர்னாண்டசும், விஜய் மல்லையாவும் வெற்றி பெற்றனர்.
மல்லையாவுக்கு பாஜக மற்றும் கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். காங்கிரஸ் கட்சியின் 2வது வேட்பாளர் மாருதி தோல்வியடைந்தார்.
ஒரிஸ்ஸா மாநிலத்தில் 3 இடங்கள் காலியாக இருந்தன. 3 இடங்களுக்குமே ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சி சார்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். பிரபல தொழிலதிபர் ரஞ்சன் பட்நாயக் என்பவர் சுயேச்சையாக களமிறங்கினார். அவருக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக ஆதரவளித்தன.
இதனால், பிஜூ ஜனதா தளத்தின் 3வது வேட்பாளர் வெற்றி பெறுவதில் கடும் சிக்கல் ஏற்பட்டது. இந் நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிபாஜி மஜ்ஹி மற்றும் பாஜக சேர்ந்த பீமசேன சவுத்திரி ஆகிய இரண்டு எம்.எல்.ஏக்களும் காணாமல் போயினர்.
அவர்களை பிஜூ ஜனதா தளம் கட்சியினர் கடத்திச் சென்று விட்டதாக புகார் கூறப்பட்டது. இது தவிர, மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏவும் நேற்று ஓட்டு போட வரவில்லை. இதனால், பிஜூ ஜனதா தளம் கட்சியின் 3வது வேட்பாளர் மிக எளிதாக வென்றார். இதன்மூலம் பாஜக-காங்கிரஸ் அமைத்த ரகசிய கூட்டணியை உடைத்தார் முதல்வரும் பிஜூ ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக்.
ராஜஸ்தான் மாநிலத்தில் 4 இடங்கள் காலியாக இருந்தன. அதற்கு பாஜக சார்பாக பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, வி.பி.சிங் ஆகியோரும் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பாக மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, ஆஷிக் அலி தக் மற்றும் தொழிலதிர் சந்தோஷ் பக்ரோடியா ஆகியோர் போட்டியிட்டனர்.
பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு ஜெத்மலானியை வேட்பாளராக நிறுத்தியதில் அதிருப்தி நிலவி வந்தது. எனவே, அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் 75 பேரை முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில் ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்தது பாஜத.
எம்.எல்.ஏக்களை மகிழ்விக்க ராஜ் நீதி' புத்தம் புதிய இந்தித் படம் போட்டுக் காண்பிக்கப்பட்டது.
இத்தனை சர்ச்சைகளுக்கு இடையிலும் பாஜக சார்பில் போட்டியிட்ட ராம் ஜெத்மலானி, வி.பி.சிங் மற்றும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஆனந்த் சர்மா, ஆஷிக் அலி தக் ஆகிய 4 பேரும் வெற்றி பெற்றனர். காங்கிரசின் மறைமுக ஆதரவுடன், பாஜக எம்எல்ஏக்களை வளைக்க முயன்ற பக்ருடியா தோல்வியடைந்தார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் காலியாக இருந்த இரு இடங்களுக்கு காங்கிரஸ், பாஜக, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் தலா ஒரு வேட்பாளரை நிறுத்தின.
மொத்தமுள்ள 81 எம்.எல்.ஏக்களில் 79 பேர் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள். அதில் பாஜக எம்.எல்.ஏ. ஒருவரும் மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. ஒருவரும் வாக்களிக்கவில்லை.
மீதியிருந்த 77 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டபோது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தீரஜ்பிரசாத், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் போட்டியிட்ட கே.டி.சிங் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர். பாஜக வேட்பாளர் அஜய் மரூ தோல்வியடைந்தார்.
அதே போல பிகாரில் பல்வேறு கட்சி எம்.எல்ஏக்களும் கட்சி மாறி வாக்களித்தனர். வாக்குகள் எண்ணப்பட்டபோது லோக்ஜன் சக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், பாஜகவின் ராஜீவ் பிரதாப் ரூடி, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை சேர்ந்த ராம்கிருபால் யாதவ், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த ஆர்.சி.பி.சிங் மற்றும் உபேந்திர பிரசாத் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இதற்கிடேயே தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த 4 எம்.எல்.ஏக்களை நீக்க பாஜக முடிவு செய்துள்ளது.
பீம் சிங் செளத்ரி (ஒரிஸ்ஸா), பன்வாரி ராம் (பிகார்) மற்றும் ராஜஸ்தானில் இருவர் கட்சி மாறி வாக்களித்துள்ளனர்.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கட்சியின் உயர் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் இன்று நடக்கிறது.