சட்ட விரோதமாக திருப்பூரில் தங்கியிருந்த 2 நைஜீரியர்கள் கைது
திருப்பூர் : சட்ட விரோதமாக திருப்பூரில் தங்கியிருந்த இரண்டு நைஜீரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
முறையான ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கியிருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 6 மாதத்தில் இது போன்று 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பின்னலாடைக்கு பெயர் பெற்றது திருப்பூர். இதனால் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் வியாபார நிமித்தமாக திருப்பூர் வந்து செல்வதுண்டு.
இந்த நிலையில், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சிலர் அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிக நாட்கள் திருப்பூரில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, திருப்பூரில் அனுமதியின்றி தங்கியுள்ள வெளிநாட்டினரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
ராயபுரம், காட்டன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் தங்கியுள்ள வெளிநாட்டினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது ராயபுரத்தில் ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இருவரை கைது செய்தனர்.
அவ்விருவரும் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.