ஆண்டர்சனை இந்தியா கொண்டு வர சட்ட அமைச்சகம் பரிந்துரை
இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான அமைச்சரவைக் குழுவிடம், சட்ட அமைச்சகம் இந்த பரிந்துரையை சமர்ப்பித்துள்ளது.
போபால் ஆலையின் தவறான வடிவமைப்பே, விஷ வாயு சம்பவத்துக்குக் காரணம் என்பதால் இதற்கான முழுப் பொறுப்பையும் யூனியன் கார்பைட் தான் ஏற்க வேண்டும் என்றும் சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
நேற்றும் இன்றம் சிதம்பரம் தலைமையிலான குழு கூடி இந்த விவகாரம் குறித்து விவாதித்தது. இன்றைய கூட்டம் தொடங்கியதும் இந்த விவகாரத்தில் இரு நாட்டு உறவு பின்னணி, தூதரகரீதியிலான வழிமுறைகள் ஆகியவை குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் அமைச்சர்களுக்கு விளக்கம் தந்தார்.
இன்றைய கூட்டம் முடிந்த பி்ன் நிருபர்களிடம் பேசிய சிதம்பரம், போபால் விவகாரம் தொடர்பாக அனைத்து சட்டரீதியான வழிமுறைகள் குறித்தும் விவாதித்துள்ளோம் என்றார்.
அர்ஜூன் சிங் மறுப்பு:
இதற்கிடையே இந்த விஷயத்தில் முதல் முறையாக தனது மெளனத்தை கலைத்துள்ளார் மூத்த காங்கிரஸ் தலைவரும், ஆண்டர்சன் தப்பிச் சென்றபோது மத்தியப் பிரதேச முதல்வராக இருந்தவருமான அர்ஜூன் சிங்.
ஆண்டர்சனை தப்பவிடும் அளவுக்கு எனக்கு அதிகாரம் எல்லாம் இல்லை. என் அதிகாரத்துக்கு அப்பாற்ற விஷயத்தில் என்னை தொடர்புப்படுத்தி குற்றம் சாட்டுவது நியாயமல்ல என்று இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
இதன்மூலம் ஆண்டர்சனை தப்பவிட்டது அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் வெளியுறவு அமைச்சர் நரசிம்ம ராவ் அண்ட் கோ தான் என்ற வாதம் வலுவடைந்துள்ளது.