ஜூன் 20-நாகர்கோவிலில் வரதட்சணை ஒழிப்பு மாநாடு!
நாகர்கோவில்: வரதட்சணை ஒழிப்புச் சட்டத்தை உறுதிபட அமல்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகர்கோவிலில் ஜூன் 20 ம் தேதி வரதட்சணை ஒழிப்பு மாநாட்டை நடைபெற உள்ளது.
இந்த மாநாடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் என்.முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
வரதட்சணை கொடுமை என்பது அனைத்து சமூக மக்கள் மத்தியிலும் பரவி வரும் ஒரு நோயாகும். வரதட்சனையால் இரு வீட்டாரும் பெரும் பாதிப்படைகின்றனர். இந்த நோய் நாட்டில் இருந்து அறவே ஒழிக்கப்பட வேண்டும்.
நமது பொருளாதார வளர்ச்சிப் பாதை சிலருக்கு வளர்ச்சியையும், பலருக்கு விரக்தியையும் அளித்து மனித உறவுகளை பண உறவுகளாக சுருக்கி, வன்முறையைத் தூண்டுகிற பாதையாக இருக்கின்ற காரணத்தால் தான் வரதட்சணை போன்ற சமூக குற்றங்கள் நடைபெறுகின்றது.
நுகர்வுக் கலாச்சாரம், ஆணாதிக்க கலாச்சார மதிப்பீடுகள், இவற்றை நியாயப் படுத்துகிற சமூக வடிவமைப்பு போன்றவற்றுடன் வரதட்சணைக் கொடுமையை தொடர்புபடுத்தி பார்க்க வேண்டி உள்ளது.
இந்த கொடுமையைப் போக்கிட வரதட்சணை ஒழிப்புச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும், வரதட்சணை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளை போதுமான எண்ணிக்கையில் நியமிக்க வேண்டும். குறிப்பாக அவர்களுக்கு அதிக அதிகாரங்கள் அளிக்க வேண்டும். அனைத்து திருமணங்களையும் பதிவு செய்வதை கட்டாயப்படுத்த வேண்டும். திருமணச் செலவுகளை இருவீட்டாரும் பகிர்ந்து செய்ய வேண்டும்.
மேலும், செல்வந்தர்கள், அரசியல் தலைவர்கள் என்று சமூகத்தில் கருத்துக்களை உருவாக்கும் திறன் படைத்தவர்கள் அவர்கள் வீட்டுத் திருமணங்களில் ஆடம்பரத்தை அறவே ஒழிக்க வேண்டும்.
இக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் ஜூன் 20 ம் தேதி (ஞாயிறுக்கிழமை) அன்று காலை முதல் மாலை வரை வரதட்சணை ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலிருந்தும், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் உள்பட ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் சுபாஷினி அலி, மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், எஸ்.நூர்முகமது, கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் என்.முருகேசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.