கார்ட்டூன் கலைஞர் ஆர்.கே.லட்சுமணுக்கு பக்கவாதம்-மருத்துவமனையில் கவலைக்கிடம்
மும்பை: பிரபல கார்ட்டூன் கலைஞர் ஆர்.கே.லட்சுமணுக்கு மூன்று முறை லேசான பக்கவாதம் தாக்கியதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்துள்ள டாக்டர்கள் அதேநேரம் உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
86 வயதாகும் லட்சுமணுக்கு வியாழக்கிழமை புனேவில் பக்கவாதம் தாக்கியது. இதையடுத்து அங்குள்ள சஹாயத்ரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவரை மேலும் இரண்டு முறை பக்கவாதம் தாக்கியது. இதனால் அவரது உடலின் வலது பகுதியும், பேச்சும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து விமான ஆம்புலன்ஸ் மூலம் அவரை மும்பையில் உள்ள ப்ரீச்கன்டி மருத்துவமனைக்குக் கொண்டு வந்து ஞாயிற்றுக்கிழமை மாலை
சேர்த்தனர்.
சர்க்கரை வியாதியஸ்தரான லட்சுமணுக்கு தற்போது சிறுநீரக பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. மேலும், அவருக்கு நோய்த் தோற்றும் ஏற்பட்டுள்ளதாக லட்சுமணின் நண்பரும், டாக்டருமான விங்கர் குஞ்சால் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு பக்கவாதம், சிறுநீரகப் பிரச்சினை, நோய்த் தோற்று ஆகிய மூன்றுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 48 மணி நேரம் மிகவும் முக்கியமானு என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபல நரம்பியல் நிபுணர் பி.எஸ்.சிங்கால் தலைமையிலான டாக்டர்கள் குழு லட்சுமணுக்கு சிகிச்சை அளித்து வருவதாக லட்சுமணின் மகன் ஸ்ரீனிவாஸ் லட்சுமண் தெரிவித்தார்.
லட்சுமணுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை ஸ்டிரோக் வந்தது. இதனால் அவரது உடலின் இடது பகுதி பாதிக்கப்பட்டது. பின்னர் அது படிப்படியாக சரியாகி புனேவில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு அடுத்தடுத்து மூன்று முறை பக்கவாதம் தாக்கியதால் அவரது உடல்நிலை மேலும் பலவீனமடைந்துள்ளது.
மகசேசே விருது பெற்றவரான லட்சுமணின் காமன் மேன் கார்ட்டூன் பாத்திரம் மிகப் பிரபலமானது. பத்மவிபூஷன் விருது பெற்றுள்ள லட்சுமணின் கார்ட்டூன் சித்திரங்களுக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.