கோவையில் குவிந்த தமிழிறிஞர்கள்-எங்கெங்கும் தமிழ் மணம்
கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக கோவையில் தமிழிறிஞர்கள் குவிந்துள்ளனர். இதனால் எங்கு பார்த்தாலும் தமிழ் வெள்ளமாக, கோவை மாநகர் முழுவதும் தமிழ் மணம் வீசிக் கொண்டிருக்கிறது.
மேளதாளங்களுடன், நாதஸ்வரம் ஊதியபடி கலைஞர்கள் வரவேற்பு கொடுக்க பெரும் ஆச்சரியத்துடன் கோவைக்கு வந்து இறங்கியுள்ளனர் பன்னாட்டுத் தமிழிறிஞர்கள்.
இதுவரை 200க்கும் மேற்பட்ட பன்னாட்டுத் தமிழிறிஞர்கள் குழு கோவை வந்து சேர்ந்துள்ளது. தொடர்ந்து விமான நிலையத்திற்கு தமிழறிஞர்கள் குழுவினர் வந்தவண்ணம் உள்ளனர்.
இவர்களுக்கு விமான நிலையத்தில் பலமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. நாதஸ்வரம் ஒலிக்க, மேளதாளம் முழங்க மாலை அணிவித்து அனைவரையும் வரவேற்புக் குழுவினர் வரவேற்று அவர்கள் தங்க வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
மாநாட்டிற்கு மலேசிய முன்னாள் அமைச்சரும் மலேசியா இந்திய காங்கிரஸ் தலைவருமான டத்தோ சாமுவேல் விமானம் மூலம் நேற்று மதியம் கோவை வந்தார். அதேபோல மலேசிய அமைச்சர் சுப்ரமணியமும் கோவை வந்துள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து 25 பேர் கொண்ட குழு வந்துள்ளது. அதேபோல மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு குழுவும் கோவை வந்துள்ளது.
கோவை வந்துள்ள தமிழறிஞர்கள் மாநாட்டுப் பந்தலின் முகப்பைப் பார்த்து பிரமிக்கின்றனர். அரண்மனை போன்ற அந்த வடிவலங்காரம் அவர்களை வியக்க வைக்கிறது. மிகுந்த ஆர்வத்துடன் அனைத்து ஏற்பாடுகளையும் அவர்கள் பார்த்து மகிழ்கின்றனர்.
பன்னாட்டுத் தமிழறிஞர்கள் மட்டுமல்லாமல் உள்ளூர் தமிழ் அறிஞர்களும், ஆர்வலர்களும் கோவையில் குவிந்துள்ளதால் கொங்கு மண்டலம் எங்கும் தமிழ் வெள்ளமாக காணப்படுகிறது. தமிழர்களின் இந்த தமிழ்ச் சங்கமம் கோவை நகரையே தமிழ் மணத்தில் மூழ்கடித்துள்ளது.