உலகத் தமிழ் செம்மொழி மாநாடு-போக்குவரத்தில் மாற்றம்
கோவை: உலகத் தமிழ் செம்மொழி மாநாடு இன்று தொடங்குவதையொட்டி கோவையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை நடைபெறவுள்ள இனியவை நாற்பது அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பையொட்டி இந்த மாற்றம் செய்யப்படட்டுள்ளது.
வ.உ.சி. பூங்கா மைதானத்தில் 4 மணிக்கு தொடங்கும் ஊர்வலம், அவினாசி ரோடு, அண்ணா சிலை, லட்சுமி மில் சிக்னல், பீளமேடு, ஹோப் காலேஜ், வழியாக கொடிசியா வளாகத்தை அடைகிறது.
இதைக் காண லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணி முதல் ஊர்வலம் முடியும் வரை, பேரணி நடைபெறும் அவினாசி ரோட்டில் போக்குவரத்துக்கு தடை செய்யப்படுகிறது.
6 வழிகளைக் கொண்ட அவினாசி சாலையில், ஒரு பாதையை மூடி அதில் பேரணி நடைபெறவுள்ளது. மறு பாதையில் மக்கள் நின்று பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி, பால் வண்டி போன்றவை செல்ல தடை விதிக்கப்படவில்லை.
அவினாசி சாலையில் போக்குவரத்து தடுக்கப்பட்டிருப்பதால் அதற்குப் பதில் திருச்சி சாலையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.
அதேபோல விமான நிலையம் செல்ல விரும்புவோர், திருச்சி ரோடு வழியாக சிந்தாமணிபுதூர் சென்று அங்கிருந்து எஸ்.ஐ.எஸ்.எச். காலனி வந்து விமான நிலையம் போகலாம்.
ஈரோடு மற்றும் சத்தியமங்கலத்தில் இருந்து கோவை காந்திபுரத்திற்கு வழக்கம் போல் வரலாம். மேட்டுப்பாளையம் ரோட்டிலும் போக்குவரத்து மாற்றம் இல்லை. பாலக்காடு ரோட்டில் இந்து காந்திபுரம் வரும் பாதையிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
பேரூர் ரோடு, தடாகம் ரோடு, மருதலை ரோடு, மில் ரோடு, பெரியகடை வீதி, புரூக் பாண்ட் ரோடு ஆகியவற்றிலும் மாற்றம் இல்லை.