அமைச்சரவைக் கூட்டத்திற்கு மட்டும் போடுவதில் அழகிரி நம்பர் 1-மமதா பானர்ஜி நம்பர் 2
வெறும் 27 சதவீத அமைச்சரவைக் கூட்டங்களில் மட்டுமே இதுவரை அழகிரி கலந்து கொண்டுள்ளார். மமதாவின் மட்டம் 37 சதவீதம்.
மு.க.அழகிரி மொத்தம் 37 அமைச்சரவைக் கூட்டங்களுக்கு வந்ததே இல்லை.
2009 அக்டோபர் 1ம் தேதி முதல் நவம்பர் 12ம் தேதி வரை நடந்த ஒரு கூட்டத்திற்கும் அவர் போனதில்லை. அதேபோல, 2009, டிசம்பர் 13க்கு, 2010, ஜனவரி 14க்கும் இடையிலான காலத்தில் நடந்த எந்தக் கூட்டத்திற்கும் அவர் போனதில்லை.
பிப்ரவரி மாதம் அங்கொன்றும், இங்கொன்றுமாகத்தான் அவர் போயுள்ளார். மார்ச், ஏப்ரல் மாதத்தில் அவர் ஒரு கூட்டத்துக்கும் போகவே இல்லை.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஐந்து கூட்டங்களில் மட்டுமே மமதா பானர்ஜி கலந்து கொண்டுள்ளார். அதுவும் மார்ச் மாதத்திலிருந்து அவர் எந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை.
திமுகவைச் சேர்ந்த ஜவுளித்துறை அமைச்சரான தயாநிதி மாறன், கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் ஆகியோர் தலா 19 கூட்டங்களுக்குப் போகாமல் மட்டம் போட்டுள்ளனர்.
இவர்கள் தவிர சுபோத் காந்த் சஹாய், வயலார் ரவி ஆகியோரும் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு சரியாக வருவதில்லை. சஹாயின் ஆப்சென்ட் அளவு 50 சதவீதத்திற்கும் குறைவு. ரவியின் வருகைப் பதிவேடு 51 சதவீதமாக உள்ளது.
எஸ்.எம்.கிருஷ்ணா 50 சதவீத வருகைப் பதிவை வைத்துள்ளார். இதுவரை 27 கூட்டங்களில் மட்டுமே அவர் கலந்து கொண்டுள்ளார்.
ஒட்டுமொத்தமாக பார்த்தாலும், கேபினட் அமைச்சர்களின் வருகைப் பதிவு சிறப்பாக இல்லை. மொத்தம் உள்ள 32 கேபினட் அமைச்சர்களில் 12 பேர் 15 கூட்டங்களுக்கும் மேலாக வராமல் இருந்துள்ளனர்.
9 கேபினட் அமைச்சர்கள் 80 சதவீதத்திற்கும் மேலான கூட்டங்களுக்கு வந்துள்ளனர்.
ரெகுலகராக அமைச்சரவைக் கூட்டங்களுக்கு வரும் ஒருவர் பிரதமர் மன்மோகன் சிங்தான். இவர் ஒரே ஒரு கூட்டத்திற்கு மட்டும்தான் வந்ததில்லை. அது -2009ம் ஆண்டு நவம்பர்24ம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டம். அந்தக் கூட்டத்திற்கு பிரணாப் முகர்ஜி தலைமை தாங்கினார்.
பிரணாப் முகர்ஜி 3 கூட்டங்களுக்கு வராமல்இருந்துள்ளார். அம்பிகா சோனி, வீரப்ப மொய்லி ஆகியோர் 5 கூட்டங்களுக்கு வந்ததில்லை.
மற்றவர்களில் ப.சிதம்பரம், கபில் சிபல் ஆகியோர் கடந்த ஒரு வருட காலத்தில் 8 கூட்டங்களுக்கு வந்ததில்லை.
பிரதமர் மன்மோகன் சிங் தனது முழு அமைச்சரவையையும் கடந்த ஆண்டு மே 30ம் தேதி அறிவித்தார். அதன் பிறகு நடந்த கூட்டங்கள் தொடர்பான கணக்கு இவை.
சுபாஷ் சந்திர அகர்வால் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டகேள்விக்கு கிடைத்துள்ள பதில் இது.