செம்மொழி மாநாடு-விண்வெளி ஆய்வு கட்டுரைகள் சமர்பிப்பு
அறிவியல் தமிழ் அரங்கில், ஏழு அமர்வுகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. இதில் சர்வதேச விஞ்ஞானிகள் கலந்து கொள்கின்றனர்.
கம்பர் அரங்கில் நடைபெறும் சந்திரயானின் நிலவுப் பயணமும், நிலவில் நீர் கண்டுபிடிப்பும் என்ற தலைப்பிலான ஆய்வரங்கில் மயில்சாமி அண்ணாதுரை உரை நிகழ்த்துகிறார்.
அதேபோல பிரம்மோஸ்-உள்நாட்டு ஏவுகணை உருவாக்கலும், பயன்பாடு செய்வித்தலும் என்ற தலைப்பில் விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை, அணு சக்தி கனரக நீர்த் தொழிற்சாலைகளின் பாதுகாப்பு மற்றும் உற்பத்தியை மேம்படுத்த உதவும் சிறந்த செயல்பாடுகள் குறித்து அணு சக்தித் துறை இயக்குநர் அருள்தாஸ் கந்தையா ஆகியோரும் பேசுகிறனர்.
கண்ணன், மாரி மவுர்யா ஆகியோர் செவ்வாய் கிரகத்திற்கு மனிதப் பயணம் எனும் தலைப்பில் பேசுகின்றனர்.
தனது உரை குறித்து மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில், தமிழில் படித்தவர்கள் விவசாயம் முதல் விண்வெளி வரை அனைத்துத் துறைகளிலும் சாதித்திருக்கிறார்கள். தமிழில் படிப்பது, எந்த விதத்திலும் குறைந்தது அல்ல... மாறாக, தமிழில் அறிவியல் படிப்பது, சிந்தனை வளத்தை ஊட்டுவதாக அமையும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு அறிவியல் தமிழ் அரங்கத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.