'ஹெராயின்'-செக்ஸ் டாக்டர் பிரகாசுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை ரத்து
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த டாக்டர் பிரகாஷ், பெண்களை ஆபாச படங்கள், வீடியோ எடுத்து இணையத் தளத்தில் வெளியிட்டு விற்று வந்தது உள்பட பல்வேறு பாலியல் புகார்களின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் கடந்த 2002ம் ஆண்டு அண்ணா நகரில் பிரகாசுக்கு சொந்தமான மருத்துவமனையில் போலீசார் சோதனையிட்டு 55 கிராம் ஹெராயினை கைப்பற்றினர்.
இது தொடர்பாக தனி வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் சென்னை போதைப் பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் பிரகாசுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து டாக்டர் பிரகாஷ் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுதந்திரம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு சாட்சிகள் பல்டி அடித்துவிட்டதால் கீழ் கோர்ட் வழஙகிய தண்டனை செல்லாது என்று பிரகாஷின் வழக்கறிஞர் வாதாடினார்.
வாதத்தைக் கேட்ட நீதிபதி, பிரகாசுக்கு விதிக்கப்பட்ட கடுங்காவல் தண்டனையையும் ரூ.1 லட்சம் அபராதத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.