இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!
கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இன்று இணையதள மாநாடு நடந்தது. முரசொலி மாறன் அரங்கத்தில் நடந்த இதன் தொடக்க விழாவுக்கு, பேராசிரியர் அனந்த்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். அமைச்சர் பூங்கோதை வரவேற்றார்.
தமிழ் மொழிக்கான இரண்டு புதிய மென்பொருள் சி.டிக்களை மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா வெளியிட்டார். அதை சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் அமைச்சர் ராசா பேசுகையில், "இணையத் தளங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழும் ஒன்று. நாடு முழுவதும் தேசிய மின் ஆளுமை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களில் தமிழக்த்தில்தான் முதல் முறையாக தகவல் தொழில் நுட்பத்துறைக்கு தனி அமைச்சரை முதல்வர் கருணாநிதி நியமித்துள்ளார். இந்த புதிய மென்பொருள் தமிழுக்கு மேலும் பெருமை சேர்க்கும். மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வு கட்டுரைகள் இணைய தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும் என்றார்.
மாநாட்டில் சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் பேசியதாவது:
சிங்கப்பூரில் தமிழர்கள் சிறுபான்மையாக இருந்தாலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அங்குள்ள 4 ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று.
பள்ளிகள், வானொலி தொலைக்காட்சி அனைத்திலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தமிழ் பேசுவோரிடம் ஆங்கிலத்தில் பேசுவது அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் விரும்பும் வகையில் இணைய தளத்திலும் பல்வேறு மாற்றங்களை தமிழில் கொண்டு வரவேண்டும் என்றார்.