இன்று ப.சிதம்பரம் பாக் பயணம்-நாடு முழுவதும் உஷார் நிலை
மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு பின் பாகிஸ்தானுக்கு செல்லும் முதலாவது அமைச்சர் ப.சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக்குடன் சிதம்பரம் பேச்சு நடத்தவுள்ளார். அப்போது பாகிஸ்தான் மண்ணில் இருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளை அடியோடு ஒழித்துக்கட்ட விரைந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாலிக்கிடம் சிதம்பரம் வலியுறுத்தவுள்ளார்.
மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு தலைவர் ஹபீஸ் சயீத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் தயக்கம் காட்டி வருவதற்கு ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவிப்பார் என்றும் தெரிகிறது.
மேலும் பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் மும்பை தாக்குல் வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்தும் ரெஹ்மான் மாலிக்கிடம் ப.சிதம்பரம் கேட்டறிவார்.
நாடு முழுவதும் உஷார் நிலை:
இதற்கிடையே சார்க் உள்துறை அமைச்சர்கள் கூட்டம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதையடுத்து இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தையொட்டி பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள், இந்தியாவில் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதையடுத்து நாடு முழுவதும் உஷார் நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய இடங்கள், சுற்றுலா தலங்கள், பஸ், ரயில், விமான நிலையங்கள், பூங்காக்கள், கோயில்கள், வழிபாட்டு தலங்கள், முக்கியமான கட்டடங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து முக்கியமான இடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
4 பாக். கைதிகள் விடுதலை:
இந் நிலையில் குஜராத் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 4 பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் செல்வதை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் அவர்களை விடுவிக்க சிதம்பரம் ஒப்புதல் அளித்ததாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்டாரி எல்லைப் பகுதியில் ஜூன் 30ம் தேதி அந்த சிறைக் கைதிகள் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்படுவர்.
முன்னதாக நேற்று முன் தினம் பல இந்திய கைதிகளை பாகி்ஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
ஜி20 மாநாடு-பிரதமர் இன்று கனடா பயணம்:
இந் நிலையில் ஜி-20 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இன்று கனடா செல்கிறார்.
டொரண்டோ நகரில் 26, 27ம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பங்கேற்க மன்மோகன் சிங் தலைமையில் உயர்நிலைக் குழு செல்கிறது.
பிரதமருடன் திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், நிதித்துறை செயலாளர் அசோக் சாவ்லா உள்ளிட்டோரும் செல்கின்றனர்.
மீண்டு வரும் உலக பொருளாதாரத்தின் இன்றைய நிலை உள்பட பல்வேறு விஷயங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளன.
இந்த மாநாட்டையொட்டி ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டம் தென் கொரியாவின் புசான் நகரில் நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார்.
கனடா மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசுகிறார்.