யாழ். நூலகம் எரிப்பு: மன்னிப்புக் கோரிய இலங்கை அமைச்சர்!
கொழும்பு: 1981-ம் ஆண்டு யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்துக்கு இலங்கை மின்சாரத்துறை அமைச்சர் பதலி சம்பிக்க ரணவக்கே மன்னிப்பு கோரியுள்ளார்.
1981-ம் ஆண்டு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (டி.யூ.எல்.எப்.) என்ற தமிழ் அமைப்பின் சார்பில் யாழ்ப்பாணத்தில் சிங்கள அரசுக்கு எதிராக பேரணி நடந்தது. இந்தப் பேரணியின் போது 2 சிங்கள போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்துக்கு டி.யூ.எல்.எப்.தான் காரணம் எனக் கருதிய சிங்களர்கள் யாழ்ப்பாண நகரில் இருந்த டி.யூ.எல்.எப். அலுவலகம் மற்றும் தமிழர்களின் பண்பாட்டு சின்னங்களைச் சூறையாடினர்.
அதோடு மட்டுமல்லாமல் உலகப் புகழ்பெற்ற யாழ்ப்பாண நூலகத்துக்கும் தீ வைத்தனர். யாழ்ப்பாண நூலகம் மிகப் பழமை வாய்ந்ததாகும். ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகம் அது. சிங்களர்கள் தீ வைத்ததில் நூலகத்தில் இருந்த பழமையும் தொன்மையும் வாய்ந்த சுமார் 97 ஆயிரம் அரிய நூல்கள் எரிந்து சாம்பலாயின.
பின்னர் இந்த நூலகம் 2003-ம் ஆண்டு சுமார் ரூ. 5 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.
இந்த நூலகத்துக்கு இலங்கை மின்துறை அமைச்சர் ரணவக்கே அன்பளிப்பாக சில நூல்களை புதன்கிழமை அளித்து பேசினார்.
அவர் பேசியது:
"யாழ்ப்பாண நூலகம் தீ வைத்து எரிக்கப்பட்டு அரிய நூல்கள் சாம்பலாக்கப்பட்ட நிகழ்வு இலங்கைக்கே பேரிழப்பாகும். இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டியதுதான். அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன்.
1983-ம் ஆண்டுக்கு பிறகுதான் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையே அதிக அளவு பிரச்னை ஏற்பட்டது. சிங்களர்கள், தமிழர்கள் இரு பிரிவினருமே வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டனர். தற்போது விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இனி சிங்களர்களும் தமிழர்களும் இணைந்து இலங்கையின் வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும். இனி இலங்கையின் வளர்ச்சிக்கு தடை ஏதுமில்லை" என்றார்.