தென்மாவட்டங்களில் நள்ளிரவுடன் பஸகள் திடீர் நிறுத்தம்: பயணிகள் அவதி
நெல்லை: தென்மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு 10 மணி முதல் திடீரென அனைத்து உள்ளூர், வெளியூர் பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மேலும் காவல் நிலையங்கள் மூலம் அந்தந்த பகுதி போக்குவரத்து கழக அலுவலங்களுக்கு இரவு நேர பேருந்துகளை நிறுத்த தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தமிழக-கேரள எல்லையான நாகர்கோவில், மார்த்தாண்டம், களியக்காவிலை, தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இருமாநில அரசு பேருந்துகளின் இயக்கங்கள் நிறுத்தப்பட்டன.
அனைத்து பேருந்து நிலையங்களிலும் ஆயிரக்கணக்கான பயணிகள் வெளியூர் செல்ல காத்திருந்தனர். பேருந்துகள் இல்லாததால் பேருந்து நிலையத்திலேயே தங்கினர். பலர் ஆங்காங்கே உள்ள விடுதிகளில் குடும்பத்துடன் தங்கினர். பேருந்து நிலையங்களில் குவிந்திருந்த மக்களை காவல்துறையினர் அருகிலுள்ள ரயில் நிலையங்களில் சென்று தங்க அறிவுறுத்தினர்.
அதிகாலை 3 மணி முதல் ஐந்தைந்து பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் கேட்டபோது திடீரென்று எங்களுக்கு உத்தரவு வந்ததின் பேரில் அனைத்து டிப்போக்களுக்கும் தகவல் தெரிவித்தோம். மேலும், இதற்கான காரணம் அவர்களுக்கே தெரியாது என்றனர்.
நள்ளிரவில் தென்மாவட்டம் முழுவதும் பேருந்துகள் இன்றி ஏற்பட்ட திடீர் பரபரப்பால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். இந்த திடீர் நிறுத்தம் எதனால் என்று இன்று காலை 7 மணி வரை தெரியவில்லை. அதன் பின் போக்குவரத்து தொடங்கியது.