'அவ்வை காலத்தில் கருணாநிதி இருந்திருந்தால் அதியமான் ஏமாந்திருப்பார்'-ஈரோடு தமிழன்பன்
கோவை: இன்று காலை கவிஞர் வைரமுத்து தலைமையில் கோவையில் நடந்த செம்மொழி தமிழ் மாநாட்டின் ஒரு பகுதியாக, கிளம்பிற்று காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம் என்ற தலைப்பிலான கவியரங்கத்தில் முதல்வர் கருணாநிதியை புகழ்ந்து பாடி ஈரோடு தமிழன்பன் வாசித்த கவிதை...
''பிறக்காத குழந்தைக்கும் தொட்டில் கட்ட அவரிடம்தான் இதயம் இருக்கிறது. இருப்பும் இருக்கிறது.
கலைஞர் என்பது தாயின் ஆண்பால் பெயர்.
அவர் வேட்டி கட்டுகிறார்.
அவர் இதயம் எப்போதும் கசங்காத புடவையோடுதான்.
அவரின் கபால களஞ்சியத்தில் ஆண் எண்ணங்களை விட
ஈர பெண் எண்ணங்களே அதிகம்.
இல்லாவிட்டால் கோபாலபுரத்து வீட்டை கொடையாக தர முடியுமா?
அந்த அவ்வையார் காலத்தில் இவர் இருந்திருந்தால்
அந்த அதியமான் ஏமாந்திருப்பார்.
அவருடைய சங்கப் பாடல்களுக்கெல்லாம்
கலைஞர் சபாநாயகர் ஆகியிருப்பார்.
அந்த நெல்லிக்கனி இன்று இருந்தால் கலைஞர் யாருக்கு கொடுப்பார்?
வாலிக்கா? வைரமுத்துவுக்கா? அப்துல் ரகுமானுக்கா? இல்லை எனக்கா?.
எங்களில் யாருக்கும் தரமாட்டார்.
தமிழ்த்தாய்க்கு தந்து அவள் தின்று துப்பிய விதைகளை
ஒவ்வொரு கவிஞரின் வீட்டு வாசலிலும் விதைத்து வைப்பார்.
கவிதையை ஜனநாயகப்படுத்தியவர் கலைஞர்.
அதனால்தான் கவிஞர்களும் கலைஞருக்கு வாக்களிக்கிறார்கள்!''
என்றார் தமிழன்பன் தனது கவிதையில்.