பெட்ரோல் விலை உயர்வால் திமுக அரசுக்கு அவப்பெயர்-கி.வீரமணி
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வால், திமுக அரசுக்கும், அது இடம் பெற்றுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் அவப் பெயரே ஏற்படும் என தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை உயரும், உயரும் என்று கூறி இறுதியில் நேற்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் சுவிஸ் வங்கி போன்ற பல நாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள நிலையில், அவைகளை வெளியே கொண்டுவர போதிய அவசர நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இப்படி முதுகொடிக்கும் இந்த முயற்சி மிகவும் கண்டிக்கத்தக்கது.
எனவே பெட்ரோல்-டீசல் விலை உயர்வை மறுபரிசீலனை செய்யவேண்டும். ஏற்கனவே பணவீக்கம் பெருகியுள்ள நிலையில் இது மேலும் பல தீய விளைவுகளை ஏற்படுத்துவது உறுதி.
இல்லத்தரசிகள் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.35 வரை உயர்த்தப்பட்டிருப்பது மிகப்பெரிய மக்கள் விரோதச் செயலாகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும், குறிப்பாக தி.மு.க.வுக்கும் கூட இதனால் பெரும் அளவுக்கு அவப்பெயர் ஏற்படும்.
தேவைப்படும் நிதி ஆதாரங்களை ஏழை, எளிய மக்களை பாதிக்காத வகையில் புதிய வகைகளை நிபுணர்களை கலந்தாலோசித்து, பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கைவிடவேண்டும். குறைந்தபட்சம் இதனை குறைக்கவாவது செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.