'ரிடையர்' ஆவேன் என்று சொல்லவே இல்லை: கருணாநிதி
கோவையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
செம்மொழி மாநாட்டுக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், தமிழக ஆளுநர் பர்னாலா, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள், கலைஞர்கள், பொதுமக்கள், மாநாட்டுக்கு பணியாற்றிய அமைச்சர் அன்பழன், துணை முதல்வர் ஸ்டாலின், மாநிலங்களை உறுப்பினர் கனிமொழி, கோவை மாவட்ட ஆட்சியர், மாநாட்டின் பல்வேறு குழுக்களில் சிறப்பாக பணியாற்றியவர்கள், கோவை மேயர் ஆகியோருக்கும்,
தமிழறிஞர் வா.செ. குழந்தைசாமி, அனந்தகிருஷ்ணன், அவ்வை நடராஜன், பொற்கோ, வைரமுத்து மற்றும் வெளிநாட்டு தமிழ் மக்கள் சிவதம்பி போன்வறவர்கள், சிறப்பாக பணியாற்றிய பத்திரிகையாளர்கள், காவல்துறையினருக்கு நன்றி. மாநாடு நடைபெற ஒத்துழைத்த பொதுமக்களும் நன்றி.
மாநாடு தொடர்பாக செலவிட்ட தொகை ரூ. 68.50 கோடி. அதையொட்டி கோவை நகரிலும், சுற்று வட்டாரங்களிலும் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள், சாலை அமைப்பு உள்ளிட்டவற்றுக்காக செலவிடப்பட்டது ரூ. 243 கோடியாகும்.
தொடக்க விழாவில் பொதுமக்கள் 2 லட்சம் பேர் கூடினர். அன்று மாலையில் நடைபெற்ற இனியவை நாற்பது என்ற தலைப்பிட்ட கலை இலக்கிய வரலாற்று ஊர்திகளின் அணிவகுப்பில், சாலையில் இருபுறமும் நின்று கண்டுகளித்தோர் 5 லட்சம் பேர்.
24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 3 நாட்களில் மாநாட்டில் நடந்த கவியரங்கம், பட்டிமன்றங்களில் நாள்தோறும் சராசரியாக ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டனர். பொது கண்காட்சி அரங்கிலும் மணிக்கு சுமார் 3,000 முதல் 4,000 பேர் வரையிலும், தினமும் 13 நேரம் மொத்தமாக, நாள்தோறும் 40,000 பேரும் என மொத்தம் 1,70,000 பேர் வருகை தந்துள்ளார்கள்.
தமிழை மத்திய ஆட்சி மொழியாக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் தீர்மானம் கொண்டு வரப்படும்.
மாநாட்டு மலரில் 129 கட்டுரைகள்
மாநாட்டு சிறப்பு மலரில் 129 கட்டுரைகள், 34 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மாநாட்டில் கலந்து கொண்ட கட்டுரையாளர்களுக்கு 3200 மலர்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 2300 மலர்கள் உத்தரவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் தமிழறிஞர்கள் பெயரால் தனியாக மலர்கள் வெளியிடப்படும்.
தமிழ் இணைய மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் 110. மாநாட்டில் கலந்து கொள்ள பதிவு செய்து வந்தவர்கள் 300 பேர். தமிழ் ஆய்வரங்கங்களுக்கு வந்தவர்கள் 200 பேர். எனவே மொத்தமாக 500 பேர் ஆய்வரங்குளில் கலந்து கொண்டனர். தினமும் ஒருமுகப்பரங்கம் வீதம் 4 முகப்பரங்கள் நடத்தப்பட்டன. இவை ஒவ்வொன்றிலும் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இணைய மாநாட்டை ஒட்டியும், சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. அதில் 130 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
24ம் தேதி முதல் முதல் 27ம் தேதி வரையில் நடைபெற்ற மாநாட்டில் நடந்த ஆய்வரங்குகளில் இடம் பெற்ற மொத்த அமர்வுகள் 239. மொத்த கட்டுரைகள் 913. மொத்த பொருண்மைகள் அதாவது சப்ஜெக்ட்ஸ் 55. வருகை தந்த வெளிநாட்டினர் 840 பேர். கலந்து கொண்ட நாடுகள் 50.
கட்டுரை தாக்கல் செய்தவர்கள் 150 பேர். ஆஸ்திரேலியா விலிருந்து 4 பேரும், கனடாவிலிருந்து 11 பேரும், சீனாவிலிருந்து ஒருவரும், செக் நாட்டிலிருந்து1, பிரான்ஸ் 3, ஜெர்மனி 5 பேர், கிரீஸ் 1, ஹாங்காங் 1, இத்தாலி 1, ஜப்பான் 2 பேர், மலேசியா 23 பேர், மொரீஷியஸ் 3, நெதர்லாந்து 2, நியூசிலாந்து 1, ஓமன் 1, ரஷ்யா 1, சிங்கப்பூர் 22, தென் ஆப்பிரிக்கா 3, தென் கொரியா 1, இலங்கை 38, இங்கிலாந்து 9 பேர் என வந்திருந்தனர்.
மாநாடு நடந்த 5 நாட்களும் சுமார் 4 லட்சம் பேருக்கு, 30 ரூபாய் சலுகை விலையில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. வெளிநாட்டு, உள்நாட்டு விருந்தினர்கள் என 92 ஹோட்டல்களில் 1,642 அறைகளில் 2,605 பேர் தங்கியிருந்தனர் என்றார்.
கேள்வி: செம்மொழி மாநாடு முடிந்ததும் அரசியலிலிருந்து 'ரிடையர்' ஆவேன் என்று சொன்னீர்கள். இப்போதும் அந்த திட்டம் உள்ளதா?
கருணாநிதி: அந்த வார்த்தையை நான் பயன்படுத்தவே இல்லையே.
கேள்வி: அரசியலிலிருந்து சற்றே விலகியிருப்பேன், உங்களில் ஒருவராக இருக்க விரும்புகிறேன் என கூறியிருக்கிறீர்களே?
கருணாநிதி: உங்களில் ஒருவராக இருக்க விரும்புகிறேன் என்று நான் கூறியதற்கு ஓய்வு பெறப் போவதாக அர்த்தமில்லை. நான் ஓய்வுபெற வேண்டும் என நீங்கள் (செய்தியாளர்கள்) கூறினால் ஓய்வெடுக்கத் தயாராக உள்ளேன். நான் விலகியிருக்கட்டுமா? என்றார் சிரித்தபடியே.