மறைந்த காங். தலைவர் சுதர்சனம் உடல் தகனம்-கருணாநிதி அஞ்சலி
சென்னை மறைந்த சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனத்தின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. முன்னதாக முதல்வர் கருணாநிதி சுதர்சனம் வீட்டுக்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கோவையில் மாரடைப்பால் மரணமடைந்த சுதர்சனத்தின் உடல் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, ஷெனாய் நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. பொதுமக்கள், காங்கிரஸ் பிரமுகர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் சுதர்சனம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நேற்று சென்னைதிரும்பிய முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், புதுவை முதல்வர் வைத்திலிங்கம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் சுதர்சனம் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், சுதர்சனம் கட்சியை தாண்டி எனக்கு நெருங்கிய நண்பர். என்னுடைய பல குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அவரது மறைவு எனக்கு நீங்காத துயரத்தை ஏற்படுத்திவிட்டது என்றார்.
அதன் பின்னர் மாலையில்இறுதி ஊர்வலம் தொடங்கியது. அமைந்தரை மயானத்தில் நடைபெற்ற உடல் தகன நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பங்கேற்றனர். அவரது உடலுக்கு கடைசி மகன் அரவிந்தநாத் தீமூட்டினார்.