ஜனாதிபதி வரக் கூடாது என்று கடிதம் எழுதவில்லை: தா.பாண்டியன்
சென்னை: கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வரக்கூடாது என்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீலிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடிதம் எழுதவில்லை என்று அக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறியுள்ளார்.
நேற்று கோவையில் நிருபர்களுக்கு முதல்வர் கருணாநிதி பேட்டியளித்தபோது, செம்மொழி மாநாட்டுக்கு வரக் கூடாது என்று குடியரசுத் தலைவரிடம் ஜெயலலிதா, வைகோ, தா.பாண்டியன் ஆகியோர் சார்பில் மனு கொடுக்கப்பட்டதே என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த கருணாநிதி, அவர்கள் மனு கொடுத்தார்களா என்று தெரியாது. அப்படியே மனு கொடுத்திருந்தாலும் அதையும் மீறித்தான், அதை அலட்சியப்படுத்தி விட்டுத்தான் தமிழர்களை மதிக்கும் வகையில் ஜனாதிபதி மாநாட்டுக்கு வருகை தந்தார்.
மாநாட்டுக்கு ஜனாதிபதி வரக்கூடாது என்ற கருத்தில் தா.பாண்டியன் கையெழுத்திட்டிருந்தாலும் அந்தக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றத் தலைவர் சிவபுண்ணியமும் மாநாட்டிற்கு வந்திருந்தனர். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தா.பாண்டியன் மறுப்பு:
இந் நிலையில் இன்று சென்னையில் நிருபர்களை சந்தித்த தா.பாண்டியன், ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தின் நகலை வெளியிட்டார்.
அவர் கூறுகையில், அந்தக் கடிதத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதிடும் உரிமை வேண்டும் என்று மட்டுமே கூறப்பட்டிருந்ததே தவிர, செம்மொழி மாநாட்டுக்கு வர வேண்டாம் என்று எழுதப்படவில்லை என்றார்.