அடுத்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்பிற்கு ஒரே பொது நுழைவுத்தேர்வு
டெல்லி: நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர இனி ஒரே பொது நுழைவுத் தேர்வு முறையை கொண்டுவர இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு செய்துள்ளது. இந்த முறை அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும்.
நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மற்றும் சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகள் மாணவர்களை சேர்க்க தனித்தனியே நுழைவுத்தேர்வுகளை நடத்துகின்றன. இதனால் மாணவர்கள் 7க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வுகளை எழுத வேண்டியுள்ளது.
இந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவ கவுன்சிலின் வாரிய கூட்டம் அன்மையில் நடந்தது. இதில் நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத்தேர்வை கொண்டுவர முடிவு எடுக்கப்பட்டது.
இது குறித்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் கேட்டபோது, அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். இதையடுத்து பொது நுழைவுத்தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் இதர பணிகளை மேற்கொள்ள சி.பி.எஸ்.இ. வாரியத்தை அணுக இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக மருத்துவ கவுன்சிலின் தலைவர் எஸ்.கே. சரின் மற்றும் கவுன்சில் கவர்னர்களில் ஒருவரான தேவி ஷெட்டி கூறுகையில்:
அடுத்த கல்வியாண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு அறிமுகப்படுத்தப்படும். இதனால் தற்போது 7க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வுகளை எழுதும் மாணவர்களின் மன அழுத்தம் குறையும்.
இந்த பொது நுழைவுத்தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் இதர பணிகளை மேற்கொள்ள சி.பி.எஸ்.இ. வாரியத்தை அணுகி இருக்கிறோம். இந்த முறை அனைத்து அரசு, தனியார் மற்றும் சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.
பொது நுழைவுத்தேர்வால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. தனியார் கல்லூரிகள் நிர்வாக இடங்களை அவர்களே நிரப்பிக்கொள்ளலாம். இதே போன்று, சிறுபான்மை கல்லூரிகள் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை அவர்களே செய்யலாம். ஆனால், இவை அனைத்தும் நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே செய்ய வேண்டும். மேலும், சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் தேர்வு போல மருத்துவ தேர்வையும் நடத்த ஆலோசித்து வருகிறோம் என்று கூறினார்கள்.