பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஏர்ப்போர்ட்டுக்கு தனி சுரங்க பாதை
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்குக்காக அவரது அலுவலகத்திலிருந்து விமான நிலையத்திற்கு சிறப்பு சுரங்கப் பாதை அமைக்கப்படவுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கடி விமான பயணம் மேற்கொள்கிறார். டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து கார் மூலம் அவர் விமான நிலையத்திற்குப் பயணிக்க வேண்டியுள்ளது.
பிரதமரின் பயணத்தின்போது கேமல் அடாதுர்க் சாலை, சப்தர்ஜங் சாலை, அரபிந்தோ மார்க் ஆகிய சாலைகளில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பாதுகாப்பும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது.
இந்த இரண்டு பிரச்சினைகளையும் சமாளிப்பதற்காக பிரதமர் அலுவலகத்திலிருந்து விமான நிலையம் வரை சிறப்பு சுரங்கப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் மூன்று பகுதிகளைக் கொண்டது. அதாவது மூன்று பங்களாக்களை உள்ளடக்கியதாகும். அதில் அலுவலகமும் ஒன்று. இந்த இடத்திற்கும் சப்தர்ஜங் விமான நிலையத்திற்கும் இடையிலான தூரம் 3 கிலோமீட்டர். இந்த தூரத்தைக் கடப்பதற்குள் பெரும் போக்குவரத்து நெரிசலை மக்கள் சந்திக்க வேண்டியுள்ளது.
தற்போது திட்டமிடப்பட்டுள்ள சுரங்கப் பாதையானது முழுமையாக பாதாளத்திற்குள் இருக்காது. மாறாக பிரதமர் இல்லத்திலிருந்து கேமல் அடாதுர்க் மார்க் வரையிலான பகுதி சுரங்கப்பாதையாக இருக்கும். அதன் பின்னர் ராஜீவ் காந்தி பவனுக்குப் பின்னால் உள்ள ஹெலிபேட் தளம் வரை வெளியில் இருக்கும்.
சுரங்கப் பாதைகளை அமைப்பதில் இந்தியாவிலேயே பிரபலமானது டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன்தான். டெல்லியில் மெட்ரோ ரயில் திட்டத்தை இது வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.எனவே இந்த நிறுவனத்திடம் பிரதமருக்கான சுரங்கப் பாதை அமைப்புப் பணியை ஒப்படைப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரவை செயலகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது சுரங்கப் பாதை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.