ஜூலை 5 பந்த்-52 லட்சம் லாரிகள் பங்கேற்பு-சரக்கு போக்குவரத்து ஸ்தம்பிக்கும்
நாமக்கல்: ஜூலை 5ம் தேதி நாடு தழுவிய அளவில் நடைபெறும் பாரத் பந்த்தில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸும் பங்கேற்கிறது. அன்றைய தினம் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 52 லட்சம் லாரிகள் ஓடாது என்று அதன் தலைவர் சண்முகப்பா கூறியுள்ளார்.
நாமக்கல் வந்த சண்முகப்பா அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.15 ஆயிரம் செலுத்தி தேசிய பெர்மிட்' வழங்கும் முறையை அமல்படுத்தியமைக்கு மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதேபோல் தமிழகத்தில் 5000 கி.மீட்டர், கர்நாடகாவில் 4000 கி.மீட்டர், ஆந்திராவில் 3900 கி.மீட்டர் என புதிய சாலை அமைத்ததால் லாரி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தோம்.
இவ்வாறு இந்தியா ழுழுவதும் அமைக்கப்பட்டு உள்ள ஏறத்தாழ 76 ஆயிரம் கி.மீட்டர் சாலைகளில் சுங்கம் வசூலிக்க 692 சுங்கசாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 240 சுங்கசாவடிகளில் சுங்கம் வசூல் தொடங்கி விட்டது.
இந்த சாவடிகளில் அதிகப்படியான சுங்கம் வசூலிக்கப்படுவதால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே தான் கடந்த 1998-ம் ஆண்டு சுங்கம் வசூலிப்பது தொடர்பாக நிர்ணயம் செய்யப்பட்ட விதிமுறைகளையே பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 2-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்துக்கு தென்மாநில லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்து உள்ளது.
இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு அகில இந்திய மோட்டார் காங்கிரசும் ஆதரவு அளித்து உள்ளது. எனவே அடுத்த மாதம் 2-ந் தேதி முதல் வடமாநிலங்களில் இருந்து தென்மாநிலங்களுக்கு லாரிகள் இயக்கப்படாது. லாரி உரிமையாளர்களை பொறுத்த வரையில் சுங்கம் செலுத்த மாட்டோம் என ஒருபோதும் சொல்ல மாட்டோம். சுங்கம் என்ற பெயரில் தனியார் நிறுவனங்களிடம் தேசிய சொத்தை விற்பதை அனுமதிக்க மாட்டோம்.
எனவே லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை தவிர்க்கும் வகையில் சுங்க வரியை குறைக்க மாநில அரசுகள் மத்திய அரசிடம் பரிந்துரைக்க வேண்டும்.
இது ஒருபுறம் இருக்க, மத்திய அரசு டீசல் விலையை அடிக்கடி உயர்த்தி வருவது, லாரி உரிமையாளர்களை மட்டும் இன்றி பொதுமக்களையும் பெரிதும் பாதிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அந்த விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் வருகிற 5-ந் தேதி முழுஅடைப்பு போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்து உள்ளன.
அந்த போராட்டத்துக்கு அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசும் முழு ஆதரவை அளிக்கும். எனவே அன்று இந்தியா முழுவதும் 52 லட்சம் லாரிகள் ஓடாது. தமிழகத்தில் 20 லட்சம் லாரிகள் ஓடாது.
மேலும் டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூல் செய்வது குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க வருகிற 12-ந் தேதி டெல்லியில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து ஆலோசனை கூட்டம் நடக்கிறது. டீசல் மீது பஞ்சாப்பில் 8 சதவீதம் மட்டுமே வாட்வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் 21.4 சதவீத வாட்வரி வசூலிக்கப்படுகிறது. இந்த வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்றார்.