ரேஷன் பொருட்கள் கேட்டு 75 வயது மூதாட்டி உண்ணாவிரதம்
செஞ்சி: தனது குடும்ப அட்டைக்கு ரேசன் பொருட்களை வழங்க கோரி செஞ்சி தாலுகா அலுவலகம் முன் 75 வயதான மூதாட்டி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
செஞ்சியையடுத்த மேல்ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்தம்மாள் (75), கணவனால் கைவிடப்பட்ட தனது மகள் பாப்பாயி (41), மகன் புருசோத்தமனுடன் (25) வசித்து வருகிறார்.
2 ஆண்டுகளுக்கு முன் முத்தம்மாளுக்கு முதியோர் உதவித் தொகை வழங்க உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து அவரது குடும்ப அட்டைக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது.
எனவே தனது பெயரை குடும்ப அட்டையில் இருந்து நீக்கிவிட்டு தனது மகள், மகனுக்கு ரேசன் பொருட்கள் வழங்குமாறு முத்தம்மாள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், அதற்கான காலக்கெடு முடிந்து விட்டதாகக் கூறி புதிய ரேசன் கார்டு பெற விண்ணப்பிக்குமாறு அதிகாரிகள் கூறினர். புதிய ரேசன் கார்டுக்கு விண்ணப்பித்தாலும் பதில் வரவில்லை.
இதையடுத்து தனது குடும்ப அட்டைக்கு ரேசன் பொருட்களை வழங்க கோரி செஞ்சி தாலுகா அலுவலகம் முன் அமர்ந்து முத்தம்மாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தாசில்தார் சியாமளா அங்கு ஓடினார். விரைவில் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும் என்று முத்தம்மாளிடம் உறுதியளித்தார். இதை நம்பி முத்தம்மாள் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார்.
சொன்னதை செய்வாரா தாசில்தார்?