For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விசாரிக்கச் சொன்னாலே விஷத்தை கக்குகிறாரே ஜெயலலிதா-கருணாநிதி கண்டனம்

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: கோடநாடு எஸ்டேட்டுக்கள் தேயிலை தொழிற்சாலை கட்டப்படுவது தொடர்பாக புகார்கள் எழுந்துள்ளதால், இதிலே உள்ள உண்மைகளை நாட்டிற்குத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரைக் கொண்டு விசாரித்து உண்மை விவரங்களை அரசுக்கு தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. விசாரிக்க சொன்னாலே விஷத்தை கக்குகிறார் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் பாணி அறிக்கை:

கேள்வி: கோடநாட்டில் மண் சுவரிலான 142 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொழிற்சாலை சிதிலமடைந்து விழும் நிலையில் இருந்ததால், அதை புதுப்பிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுத்தான் அதை செய்வதாகவும், அதன் மீது விசாரணை நடத்துவது கண்டனத்திற்குரியது என்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளாரே?

பதில்: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், கோடநாடு ஊராட்சியில் கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்தின் சார்பில் அதன் மேலாளர், கோடநாடு கிராமம் சர்வே எண்.171-ல் தேயிலை தொழிற்சாலைக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக 4 விண்ணப்பங்கள் சமர்ப்பித்து அனுமதி கோரியுள்ளார்.

அதன் பேரில் கோடநாடு ஊராட்சிமன்ற தலைவரால் 31-7-2009 அன்று 125.69 சதுர மீட்டருக்கும், 31-7-2009 அன்று 123.28 சதுர மீட்டருக்கும், 19-8-2009 அன்று 123.28 சதுர மீட்டருக்கும், 19-8-2009 அன்று 123.28 சதுர மீட்டருக்கும் கட்டிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எதற்காக ஒரே விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதே புதிரானது.

கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி), கோடநாடு ஊராட்சி அலுவலகத்தை 21-11-2009 அன்று தணிக்கை செய்தபோது ஊராட்சித் தலைவரின் அதிகார வரம்புக்கு அதிகமாக கட்டிட உரிமம் வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே வட்டார வளர்ச்சி அலுவலருக்கு (ஊராட்சி) அறிக்கை கொடுத்ததின் பேரில் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி), தனது கடித குறிப்புஎண். ந.க. பி 3. எண். 4338-09 நாள் 23-11-2009-ல், ஊராட்சி மன்ற தலைவர்; வனத்துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் புவியியல் தொழில்நுட்பத்துறை ஆகிய துறைகளின் அனுமதியை பெறவில்லை என்றும், இந்த கட்டிடங்களை கட்ட அனுமதி கொடுக்க ஊராட்சி மன்றத்தலைவருக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்து கோடநாடு ஊராட்சி உதவியாளருக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார்.

மேலும், கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர், 23-11-2009 அன்று கோடநாடு ஊராட்சி தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கட்டிட அனுமதி வழங்க அவருக்கு அதிகாரம் இல்லை என்பதை தெரிவித்து, உடனடியாக மேற்படி கட்டிட உரிமங்களை ரத்து செய்வதோடு கட்டுமான பணிகளையும் நிறுத்தி வைக்கும்படி தெரிவித்திருக்கிறார்.

வட்டார வளர்ச்சி அலுவலரின் கடிதத்தின் பேரில் கோடநாடு ஊராட்சி தலைவர், 24-11-2009 அன்று கோடநாடு எஸ்டேட் மேலாளருக்கு தன்னால் வழங்கப்பட்ட புதிய கட்டிடப்பணிகளை, ஆய்வு செய்ய, அனுமதிகோரி கடிதம் எழுதியிருக்கிறார். மேலும், கோடநாடு ஊராட்சி தலைவர், தன்னால் தனித்தனியாக வழங்கப்பட்ட நான்கு கட்டிட அனுமதிகளை சேர்த்து ஒரே கட்டிடமாக அதுவும் ஏற்கனவே உள்ள தொழிற்சாலை கட்டிடத்துடன் இணைத்துக் கட்டுவது -ஊராட்சி விதிகளுக்கு புறம்பானது என்றும், எனவே அந்த கட்டிட உரிமங்களை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கான விளக்கம் கேட்டு 26-11-2009 அன்று கோடநாடு எஸ்டேட் மேலாளருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்.

கோடநாடு ஊராட்சித்தலைவர் 24-11-2009 அன்றும், 26-11-2009 அன்றும் எழுதிய 2 கடிதங்களும் பதிவுஅஞ்சலில் அனுப்பப்பட்ட போதிலும், கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்தால் அந்த கடிதங்கள் பெறப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

கோடநாடு ஊராட்சி தலைவர் தன்னால் வழங்கப்பட்ட நான்கு கட்டிட அனுமதிகளையும் சேர்த்து ஒரே கட்டிடமாக கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்தால் கட்டப்படுவதாகவும் அவ்வாறு கட்டிடங்கள் சேர்த்துக் கட்டும்போது அவை 500 சதுர மீட்டர் அளவிற்கு இருக்கும் என்றும் மேலும், வனத்துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் புவியியல் தொழில்நுட்பத்துறை ஆகிய துறைகளின் ஆட்சேபணை இன்மை சான்றிதழ் (என்.ஓ.சி.) பெறப்படவில்லை என்றும் கூறி தான் விளக்கம் கேட்டதற்கு தனது கடிதங்கள் எஸ்டேட் நிர்வாகத்தால் பெறப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்து தன்னால் ஏற்கனவே வழங்கப்பட்ட நான்கு கட்டிட உரிமங்களையும் ரத்து செய்து 22-12-2009-ல் உத்தரவிட்டுள்ளார். இந்த கடிதமும் பதிவு அஞ்சலில் அனுப்பப்பட்டு எஸ்டேட் நிர்வாகத்தால் பெறப்படாமல் திரும்ப அனுப்பப்பட்டு விட்டது.

ஆனால், ஜெயலலிதா தனது அறிக்கையிலே இத்தனை விவரங்களையும் மறைத்து விட்டு, சட்டத்திற்கு உட்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்றுத்தான் செப்பனிடும் பணிகள் நடைபெறுகின்றன என்று பொய்க்கு மேல் பொய்களை கூறி, மக்களை ஏமாற்ற நினைத்து காதிலே பூச்சுற்ற நினைக்கிறார். எனவேதான் இதிலே உள்ள உண்மைகளை நாட்டிற்குத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரைக் கொண்டு விசாரித்து உண்மை விவரங்களை அரசுக்கு தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. விசாரிக்க சொன்னாலே விஷத்தை கக்குகிறார்.

கேள்வி: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற தீய நோக்கத்தோடு சிறுதாவூர் பிரச்சினை குறித்து விசாரணை ஆணையத்தை தாங்கள் அமைத்ததாகவும், ஆனால் அதிலே தாங்கள் தோற்றுவிட்டதாகவும் ஜெயலலிதா சொல்லி இருக்கிறாரே?

பதில்: அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கே எடுத்துக்காட்டாக விளங்கும் ஜெயலலிதா இப்படியொரு அறிக்கை விடலாமா? 2001-ம் ஆண்டு நள்ளிரவில் என்னை வீடு புகுந்து படுக்கையறையிலே நுழைந்து கைது செய்தாரே அதற்கு பெயர்தான் அரசியல் காழ்ப்புணர்ச்சி.

சிறுதாவூர் விசாரணை ஆணையம் ஏன் போடப்பட்டது என்பது பற்றி பலமுறை நான் விளக்கம் அளித்திருக்கிறேன். ஆனால் அதை எல்லாம் ஜெயலலிதா மறைக்க பார்க்கிறார். சிறுதாவூர் கிராமத்தில் ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை அபகரித்தது பற்றி 2006-ம் ஆண்டிலேயே ஊர்வலமாக கோட்டைக்கு வந்து என்னிடம் புகார் மனுவினை கொடுத்தவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அன்றைய மாநில செயலாளர் என்.வரதராசன்தான்.

அவர் கொடுத்த புகார் மனுவிலே, "1967-ம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சரான சி.என்.அண்ணாதுரையால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய தலித் மக்கள் விவசாயம் செய்து வாழ்வதற்காக 20 குடும்பங்களுக்கு விவசாய நிலம் தலா 2.50 ஏக்கர், குடிமனைக்காக 10 சென்ட் மற்றும் பொது பயன்பாட்டிற்காக ஒரு ஏக்கர் என மொத்தம் 53 ஏக்கர் நிலம், பட்டா வழங்கப்பட்டது.

1992ஆம் ஆண்டுவாக்கில் சிறுதாவூரில் அமைந்துள்ள சொகுசு பங்களாவில், முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் வந்து தங்க ஆரம்பித்த பின்னர் மேற்படி நிலங்களில் இருந்து தலித் மக்கள் நிர்ப்பந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பலர் பெயரில் போலி கிரயப்பத்திர பதிவுகளும் நடை பெற்று, முறையான விசாரணை நடைபெறாமல் பட்டா மாற்றங்களும் செய்யப்பட்டு சிறுதாவூர் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட மேற்படி நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. கிடைத்துள்ள வருவாய்த்துறை ஆவணங்கள் அடிப்படையில் சசிகலா குடும்பத்தை சேர்ந்த பலர் பெயரில் பட்டாக்கள் மாற்றப்பட்டுள்ளன.

எனவே, சிறுதாவூர் தலித் மக்களுக்கு மீண்டும் விவசாய நிலம் கிடைத்திடவும்; போலியான பத்திரப்பதிவு மற்றும் பட்டாக்களை ரத்து செய்து சிறுதாவூர் தலித் மக்களுக்கு வழங்கிடவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். போலி பத்திரப்பதிவு பட்டா மாற்றம் செய்து தலித் மக்களின் நிலங்களை மோசடி செய்தவர்கள் மீது உரிய விசாரணையும், நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டுகிறோம்.

மேலும், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தங்கியிருந்த சிறுதாவூர் பங்களா அமைந்துள்ள இடம் அவரது தோழி சசிகலாவின் நெருங்கிய உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் பெயரில் பதிவு மற்றும் பட்டா உள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அந்த பங்களாவை சுற்றியுள்ள காம்பவுண்டுக்குள் அரசு புறம்போக்கு நிலம் சுமார் 200 ஏக்கர் வளைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே செல்வி ஜெயலலிதா மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையால் பதிவு செய்யப்பட்டுள்ள வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் சிறுதாவூர் பங்களாவும் குற்றப் பத்திரிகையில் சொத்தாக சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி நிலங்கள் சம்பந்தமாகவும் தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்தி புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களை கையகப்படுத்தி சிறுதாவூர் கிராமத்தில் வசிக்கும் நிலமற்ற இதர விவசாய குடும்பங்களுக்கு வழங்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்'' என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அந்த மனுவின் அடிப்படையிலேதான் உண்மையை அறிய விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. சிவசுப்பிரமணியம் கமிஷன் விசாரணையே சிறுதாவூர் நிலத்தில் ஜெயலலிதாவுக்கு பங்கு உண்டா என்பதைப் பற்றியோ, அந்த நிலம் அவர் பெயரில் உள்ளதா என்பதை பற்றியோ அல்ல. சிறுதாவூர் பங்களா உள்ள நிலம் அவர் பெயரில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அவரே முன்பு விடுத்த அறிக்கையில், அந்த வீட்டிற்கு வாடகை கொடுத்துவிட்டு தங்குவதாக சொல்லியிருக்கிறாரே? சிவசுப்பிரமணியம் கமிஷன் விசாரணைக்காக ஜெயலலிதாவை அழைக்கவே இல்லையே!


இந்த நிலையில் அவருக்கு பங்கு இருக்கிறதா? இல்லையா? என்ற பிரச்சினை இப்போது எங்கே வந்தது? ஆனால் அவர் அடிக்கடி சென்று தங்குகின்ற சிறுதாவூர் பங்களா யாருடையது, அவர் யாருக்கு வாடகை கொடுக்கிறார், அந்த பங்களாவின் சுற்றுச்சுவர் மற்றும் வேலிக்குள் அமைந்துள்ள மொத்த நிலப்பரப்பு 115 ஏக்கர்; அதில் 35 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் என்று சொல்லப்படுகிறதே அது உண்மையா? இல்லையா? அரசுக்கு சொந்தமான அந்தப் புறம்போக்கு நிலங்களை அபகரித்து வளைத்துப் போட்டுக்கொண்டது யார்?

நீதிபதி சிவசுப்பிரமணியம் கமிஷன் அறிக்கையிலே அந்த பங்களாவிற்கு பக்கத்தில் தலித் மக்களுக்காக அரசினால் வழங்கப்பட்ட 53 ஏக்கர் நிலத்தை வாங்கியவர்கள் பரணி ரிசார்ட்ஸ் என்றும், அதன் உரிமைதாரர்கள் வி.என்.சுதாகரன், இளவரசி, சித்ரா என்றும் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் எல்லாம் யார்? ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவுக்கு மிக நெருக்கமான உறவினர்களா, இல்லையா?

2005-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலே அந்த பகுதியிலே உள்ள இடங்களுக்கு எல்லாம் ஒரே நாள் இடைவெளியில் பட்டா மாற்றம் மிகவும் அவசர அவசரமாக செய்யப்பட்டதாகவும், அந்த பட்டா மாற்றங்கள் செய்வதற்காகவே, 10 நாட்களில் ஓய்வு பெறுகின்ற நிலையிலே இருந்த தியாகராஜன் என்ற தாசில்தாரை பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு மாறுதல் செய்து, அவர் முறைகேடாக அந்த பட்டா மாற்றங்களை எல்லாம் செய்து கொடுத்தார் என்றும் நீதிபதி சிவசுப்பிரமணியம் கமிஷன் சொல்லியிருக்கிறது,

அந்த முறைகேடுகளுக்கு எல்லாம் பொறுப்பானவர்கள் யார், எந்த ஆட்சியில் அது நடைபெற்றது என்பதை பற்றி எல்லாம் அறிக்கை விடும் ஜெயலலிதா பதில் சொன்னால் நன்றாக இருக்கும். சிறுதாவூரில் தலித்துகளுக்காக வழங்கப்பட்ட நிலத்தை சட்டவிதிகளுக்கு புறம்பாக சிலபேர் வாங்கிக் கொண்டார்கள். அதை திரும்பப்பெற்று நிலமற்ற தலித்துகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கோரிக்கையை ஏற்றுத்தான் நீதிபதி சிவசுப்பிரமணியம் விசாரணை கமிஷன் நியமிக்கப்பட்டது.

தற்போது அந்த கமிஷன் கொடுத்துள்ள அறிக்கையில், தலித்துகளுக்காக ஏற்கனவே வழங்கப்பட்ட அந்த நிலம் தற்போது யாருடைய பொறுப்பிலே இருந்தாலும், அந்த பட்டாவை எல்லாம் ரத்து செய்துவிட்டு மீண்டும் நிலமற்ற தலித் மக்களுக்கு வழங்க வேண்டும்' என்று சொல்லப்பட்டு உள்ளது. எனவே இதிலே எதை தோல்வி என்று ஜெயலலிதா கூறுகிறார். வரதராசன் அளித்த மனுவில் உள்ள வேண்டுகோளின்படி கமிஷன் அறிக்கையை ஏற்று இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையா? சட்டப்படி விரைவில் எல்லாம் நடக்கும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X