மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு
இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெற கல்லூரி நிர்வாகம் கோடிக்கணக்கில் லஞ்சம் தந்தது தெரியவந்துள்ளது. முன்னாள் இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாய்க்கு லஞ்சம் கொடுத்தே இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதையடுத்து சிபிஐ வழக்குப் பதிவு செய்ததையடுத்தே நேற்று அந்தக் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதும் தெரியவந்துள்ளது.
லஞ்ச வழக்கில் கேத்தன் தேசாய் கைதாகி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கக்து.
இந் நிலையில் மேல்மருத்தூர் பீடத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி என அனைத்துக் கல்வி நிலையங்களிலும் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தினர்.
நேற்று அதிகாலை தொடங்கிய ரெய்ட் நள்ளிரவை தாண்டியும் நடந்தது.
அடிகளாரிடம் 17 மணி நேரம் விசாரணை:
பங்காரு அடிகளார், அவரது மகன் அன்பழகன், மகள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் பலரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்தது.
அடிகளாரிடம் நேற்று பகல் 12 மணிக்குத் தொடங்கிய விசாரணை இன்று அதிகாலை 5 மணிக்குத் தான் முடிவடைந்தது. அதே நேரத்தில் அவரது வீட்டிலும் சோதனை நடந்தது.
விசாரணையின்போது கேத்தன் தேசாய்க்கு தரப்பட்ட லஞ்சப் பணம், கல்லூரியின் வரவு செலவுகள், நன்கொடை கட்டணத்துக்குரிய ரசீதுகள் ஆகியவை குறித்து சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன.
நிருபர்களுக்கு அடி, உதை:
இந் நிலையில் இந்த வருமான வரி விசாரணை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் பயங்கரமாக தாக்கப்பட்டனர்.
நிருபர்களின் டிவி கேமராக்கள், வாகனங்களை அங்கிருந்தவர்கள் பறிமுதல் செய்து கொண்டனர். பின்னர் நிருபர்களுக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது.