சென்னை-பெங்களூர் குழாய் மூலம் பெட்ரோல் வினியோகம் துவக்கம்
இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் ரூ.270 கோடி செலவில் சென்னை-பெங்களூர் இடையே நிலத்துக்கடியில் 290 கி.மீ. நீளத்துக்கு குழாய் பதித்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
இதுவரை பெங்களூர் அருகே தேவனகொந்தியில் உள்ள பெட்ரோலிய சேமிப்புக் கிடங்குக்கு சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் இருந்து ரயில் மூலம் பெட்ரோலியப் பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வந்தது.
ரயில் மூலம் வினியோகிக்க அதிக செலவு ஆவதாலும் இது பாதுகாப்பற்றது என்பதாலும் சென்னையிலிருந்து பெங்களூருக்கு குழாய் மூலம் பெட்ரோலியப் பொருட்களை வினியோக்க இந்தியன் ஆயில் நிறுவனம் திட்டமிட்டது.
இதற்காக சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் இருந்து பெங்களூர் தேவனகொந்தி கிடங்குக்கு 290 கி.மீ. தூரம் குழாய் பதிக்கப்பட்டது.
இந்தக் குழாய் 96 கி.மீ. தூரம் தமிழகப் பகுதியிலும், 111 கி.மீ. ஆந்திரத்திலும் 83 கி.மீ. கர்நாடகப் பகுதியிலும் பதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழாய் மூலம் சென்னையிலிருந்து ஆண்டுக்கு 1.45 மில்லியன் டன் இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்கள் வினியோகிக்கப்படும்.
வரியைக் குறைக்க மாநிலங்களுக்கு தியோரா கடிதம்:
இந் நிலையில் பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் எனக்கோரி மாநில முதல்வர்களுக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய தியோரா, பிற நாடுகளை ஒப்பிடும்போது நமது நாட்டில் எரிபொருட்களின் விலை குறைவாக உள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் லிட்டர் 9 ரூபாயில் இருந்து 12 ரூபாயாக கெரசின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லியில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.335. பாகிஸ்தானில் ரூ.580, வங்கதேசத்தில் ரூ.500, இலங்கையில் ரூ.800, நேபாளத்தில் ரூ.780 என்ற விலைகளில் விற்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது சமையல் சிலிண்டரின் விலையை ரூ.35 மட்டுமே உயர்த்தியுள்ளோம்.
எரிபொருட்களின் விலையை ஓரளவு குறைத்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் நடவடிக்கையாக அவற்றின் வரிகளைக் குறைக்குமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.
நாட்டிலேயே கர்நாடகத்தில்தான் பெட்ரோல், டீசல் உள்பட எரிபொருட்களின் விலை அதிகமாக உள்ளது. எனவே, எரிபொருட்களின் விலையை குறைக்க வரிகளைக் குறைக்குமாறு முதல்வர் எதியூரப்பாவை கேட்டுக்கொண்டுள்ளேன் என்றார்.