என்எல்சி தொழிலாளர் ஸ்டிரைக்-பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி
அதேசமயம், தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் உள்ள 14 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களுக்கு 2007-ம் ஆண்டு ஜுலை 1-ந் தேதி முதல் முன்தேதியிட்ட புதிய ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்தக்கோரி அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொ.மு.ச. மற்றும் பாட்டாளி தொழிற்சங்கத்தினர் 30-ந் தேதி இரவு 10 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு 3 கட்ட பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்திருந்தன. இந்த நிலையி்ல் நேற்று சென்னையில் உள்ள நெய்வேலி ஹவுசில் தொடங்கியது. பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் ஆணையர் ஜெகன்னாதராவ் முன்னிலை வகித்தார்.
என்.எல்.சி. சார்பில் தலைமை பொது மேலாளர் லூதர்ஸ், பொது மேலாளர் பெஞ்சமின் ராயப்பா, தொழிற்சங்கம் சார்பில் தொ.மு.ச. தலைவர் செ.குப்புசாமி, என்.எல்.சி. தொழிற்சங்க தலைவர் வீரராமச்சந்திரன், பாட்டாளி தொழிற்சங்க பொதுச் செயலாளர் ஞானசேகரன், என்.எல்.சி. பாட்டாளி தொழிற்சங்க தலைவர் பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர். இரவு 9 மணி வரை நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை.
பின்னர் வெளியில் வந்த குப்புசாமியும், ஞானசேகரனும் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. நிலுவைத்தொகை பற்றிய பிரச்சினையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தம் ஏற்படுவதற்கான அடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. மீண்டும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு இங்கு பேச்சுவார்த்தை நடைபெறும். இதில் உடன்பாடு ஏற்படும் என்று நம்புகிறோம்.
தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது. அதேநேரம் வேலைநிறுத்த போராட்டம் தொடரும். இந்த போராட்டத்தினால் மின் உற்பத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இனியும் பாதிப்பு ஏற்படாது என்றனர்.