திண்டுக்கல் பஸ் நிலையத்தில் தி.மு.க, கம்யூனிஸ்டு, பா.ஜ.க வினர் கடும் மோதல்-மக்கள் பீதி
திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் நிலையத்தில் தி.மு.க, கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க வினர் கடும் மோதலில் ஈடுபட்டதால் அந்த இடமே போர்க்களம் போல மாறியது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நாடு முழுவதும் பந்த் நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் 55 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது.
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமை தாங்கினார்.
இந்த போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பேருந்து நிலையத்தைவிட்டு பேருந்துகளை வெளியேற விடாமல் மறித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் நடத்திய இடத்திற்கு அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், அதன் மாவட்ட தலைவர் அரபுமுகமது தலைமையில் மறியல் நடத்தினர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்ற முயன்றபோது போலீசாருக்கும், ஜனநாயக வாலிபர் சங்கத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தவே ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போலீசாரை தாக்கினர். இதைப்பார்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், போலீசாரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே பஸ்நிலையத்தில் எம்.ஜி.ஆர். சிலை அருகே பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் திருமலை பாலாஜி தலைமை தாங்கினார்.
இந்நிலையில் நகரசபை தலைவர் நடராஜன் தலைமையில், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜன், மணிமுருகன் மற்றும் தி.மு.க.வினர் பஸ் நிலையத்துக்கு ஊர்வலமாக வந்தபோது பாரதீய ஜனதா கட்சியினருக்கும், தி.மு.க.வினருக்கும் மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் தி.மு.க. நகர துணை தலைவர் ராஜா காயம் அடைந்தார். அந்த கட்சியை சேர்ந்த திண்டுக்கல் நகர 37-வது வார்டு பிரதிநிதி ராஜேந்திரனின் மண்டை உடைந்தது.
மேலும், பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த கோட்ட பொறுப்பாளர் நாகராஜனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. நகர தலைவர் தனபாலுக்கும் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து கிழக்குப்புறமாக வந்தபோது இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், அதன் மாவட்ட செயலாளர் பேட்ரிக் சகாயநாத் தலைமையில் பஸ் நிலையத்தில் மறியலில் ஈடுபட ஊர்வலமாக வந்தனர். அப்போது தி.மு.க.வினரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் மோதிக்கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் சேர்ந்து கொண்டனர். மூன்று கட்சியினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள் அலறியடித்து ஓடினர்.
இந்த மோதல் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி இருதரப்பினரும் தனித்தனியாக மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்துச்சாமி போலீஸ் படையுடன் பஸ் நிலையத்துக்கு வந்தார்.
மோதலில் ஈடுபட்டவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது கூட்டத்துக்குள் மறைந்து இருந்த சிலர் கற்களை வீசினர். இதையடுத்து மறைந்து இருந்த கும்பலை போலீசார் விரட்டி அடித்தனர்.
பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே செல்லாமல் பேருந்துகளும் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த மோதலில் தி.மு.க., பாரதீய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த 10 பேர் காயம் அடைந்தனர்.
மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. பாலபாரதி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாண்டி, மாவட்ட குழு உறுப்பினர் குமரவேலு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பேட்ரிக் சகாயநாத் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதே போன்று மறியலில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சியினரும், சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினரும் கைது செய்யப்பட்டனர்.