எதிர்க்கட்சிகளின் பாரத் பந்த்தால் இந்தியப் பொருளாதாரத்திற்கு ரூ. 13,000 கோடி இழப்பு-எப்ஐசிசிஐ
அதேசமயம் ரூ. 3000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக இந்திய தொழிலக கூட்டமைப்பான சிஐஐ தெரிவித்துள்ளது.
சிஐஐ அமைப்பின் இயக்குநர் சந்திரஜித் பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிஐஐயின் கணிப்புப் படி, பாரத் பந்த் இந்தியப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பந்த் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒட்டுமொத்தமாக ரூ. 3000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
பந்த் நடக்கும்போதெல்லாம் முதலில் பாதிக்கப்படுவது அன்றாடங்காய்ச்சிகள் எனப்படும் தினக்கூலி தொழிலாளர்கள்தான். அதேபோல போக்குவரத்துத் துறையும், சிறு தொழில்துறையும் கடும் பாதிப்பை சந்திக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.
இன்போசிஸுக்கு ரூ.50 கோடி இழப்பு
இன்போசிஸ் நிறுவன எச்ஆர் தலைவர் வி.மோகன்தாஸ் பய் கூறுகையில், இன்போசிஸ் நிறுவனத்திற்கு இந்த பந்த்தால் ரூ.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாங்கள் நேற்றைய தினம் விடுமுறையை அறிவிக்க நேரிட்டது. இதனால் எங்களுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.50கோடியாகும். ஒரு பந்த்துக்காக நகரையே மூடுவது என்பது பெருத்த அவமானமாகும் என்றார் பய்.
இதே அளவுக்கு விப்ரோ நிறுவனமும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக அதன் இணை தலைமை செயலதிகாரி கிரிஷ் பரஞ்ச்பே தெரிவித்துள்ளார்.