பந்த்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி-கைதானவர்களை விடுதலை செய்க: ஜெ.
சென்னை: பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவளித்து பங்கேற்ற அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இந்தப் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
விலைவாசி, பணவீக்கம் உயர வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையையும், நடுத்தர, ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையையும் உயர்த்தியுள்ள மத்திய அரசைக் கண்டித்தும், இனி வரும் காலங்களில், கச்சா எண்ணெயின் சர்வதேச விலைக்கேற்ப பெட்ரோல் விலையை உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளதோடு, டீசல் விலையையும் இதுபோன்று உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப் போவதாக அறிவித்துள்ள மத்திய அரசைக் கண்டித்தும், அ.தி.மு.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், இந்திய தேசிய லீக் உள்ளிட்ட ஒத்த கருத்துடைய கட்சிகளின் சார்பில் தமிழகத்தில் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தின்போது ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க.வினர் மற்றும் தோழமைக் கட்சிகளைச் சார்ந்தவர்களை கைது செய்து அவர்கள் மீது பொய் வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது.
இச்செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்து உடனடியாக கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தி.மு.க. அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
இத்தனையையும் மீறி, அ.தி.மு.க. தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, தி.மு.க-வினரின் மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் பயப்படாமல், இந்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்த வியாபாரிகள், வாகன உரிமையாளர்கள், லாரி ஓட்டுநர்கள், ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில் நடத்துவோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும், இந்தப் போராட்டம் வெற்றிகரமாக முடிந்திட முழு மூச்சுடன் பாடுபட்ட எனதருமைக் கழக உடன்பிறப்புகளுக்கும், தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், இதர அமைப்பினருக்கும், பொதுமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.