சிறைவாயிலில் பெண் கைதி சேலையை கழற்றி போராட்டம்-சேலத்தில் பரபரப்பு
சேலம்: போலீசார் தன் தாய் மீது பொய் வழக்கு போட்டதாக கூறி சேலம் பெண்கள் கிளை சிறை வாசலில் ஒரு பெண் கைதி சேலையை கழற்றி வீசி போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் கிளை சிறைச்சாலையில் சேலம் பெரிய கொல்லப்பட்டியைச் சேர்ந்த இளம்பெண் மைதிலி அடைக்கப்பட்டு உள்ளார். மைதிலி, மேகலா, சியாமளா ஆகிய மூவரும் நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதியில் திருட்டில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 3 பேரையும் நேற்று காலை ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட பெண் போலீசார் அவர்களை சிறைச்சாலைக்கு வெளியில் அழைத்து வந்தனர். அப்போது மைதிலி திடீரென தான் உடுத்தியிருந்த சேலையை கழற்றி விட்டு, பாவாடை ஜாக்கெட்டுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு போதை பாக்கு மற்றும் மூக்குபொடி பொட்டலங்களை பெண்கள் கிளை சிறைச்சாலைக்குள் வீசியதற்காக மைதிலியின் தாய் சாந்தி கைது செய்யப்பட்டார்.
தன் தாய் மீது போலீசார் பொய் வழக்கு போட்டிருப்பதாகக் கூறி மைதிலி இவ்வாறு போராட்டம் நடத்தினார்.
இது குறித்து தகவல் அறிந்த பெண்கள் கிளை சிறைக்காவலர்கள் மைதிலியை வலுக்கட்டாயமாக சிறைக்குள் அழைத்துச் சென்றனர்.