கே.பி மூலமாக புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் ஆதரவைப் பெற முயற்சி-கோத்தபயா கூறுகிறார்
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேசப் பிரிவு தலைவராக இருந்து வந்த கேபியை பயன்படுத்தி புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆதரவைப் பெற முயற்சித்து வருவதாக கோத்தபயா ராஜபக்சே கூறியுள்ளார்.
புலிகளின் ஆயுதபேர வர்த்தகத்தை கவனித்து வந்த குமரன் பத்மநாதன், இறுதிகட்ட போரின்போது அந்த அமைப்பின் சர்வதேசப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார். ஈழப் போர் முடிந்த பின்னர், கோலாலம்பூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
பி்ன்னர் இலங்கை கொண்டு வரப்பட்ட அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தது இலங்கை அரசு. இந்த விசாரணையின் விளைவாக கேபி அப்ரூவராக மாறி விட்டார். இப்போது இலங்கையின் பாதுகாப்பில் ராஜபோகமாக அவர் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் கேபியை வைத்து ஒரு புதிய சதுரங்க ஆட்டத்தை ஆட புறப்பட்டுள்ளார் கோத்தபயா. அவர் மூலம் வெளிநாடுவாழ் தமிழர்களின் ஆதரவைப் பெறவும், புலிகளின் வெளிநாட்டு அமைப்புகளை அழிக்கவும் முயற்சித்து வருவதாக கூறியுள்ளார் அவர்.
ராஜபக்சேவின் தம்பியான கோத்தபயா இதுகுறித்துக் கூறுகையில்,
சர்வதேச அளவில் மூன்று அமைப்புகள், விடுதலைப் புலிகள் ஆதரவுப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. சர்வதேச தமிழ் கூட்டமைப்பும், ருத்ரகுமார், நெடியவன் ஆகிய இரண்டு தனிநபர்களும் புலிகளின் பிரதிநிதிகளாக இன்னமும் செயல்பட்டு வருகின்றனர்.
புலிகள் விவகாரத்தில் உலகிற்கு உண்மையை எடுத்துரைக்க இலங்கை அரசு கடைமைப்பட்டிருக்கிறது என்றார் அவர்.
இதற்கிடையே கேபியின் அழைப்பின் பேரில் வெளிநாடு வாழ் தமிழர்கள் சிலர் சமீபத்தில் கொழும்பு வந்து சென்றுள்ளனர்.
அவர்களிடம் பேசிய பத்மநாதன், போரினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும், அங்கு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியதின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
இவர்கள் போய் தத்தமது நாடுகளில் கேபி கூறியதைச் சொல்லி அவர்களை இலங்கை அரசுக்கு ஆதரவாக திருப்புவார்கள் என இலங்கை அரசு எதிர்பார்க்கிறதாம். இதுபோல புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆதரவை தன் பக்கம் திருப்பி விட்டால் விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுக்க முடியாது என்பது இலங்கை அரசின் எண்ணம்.