ஏர் டெல்லுக்கு எதிராக யுத்தம் நடத்தும் தமிழ் ஆர்வலர்கள் !
மதுரை: இலங்கையில் ஈழ தமிழர்களை படுகொலை செய்ய காரணமாக இருந்த அந் நாட்டு அரசுக்கு பல கோடி ரூபாய் வாரிக் கொடுத்த ஏர் டெல் நிறுவனத்தை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதுதொடர்பாக எஸ்.எம்.எஸ் மூலமும் தீவிர பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழர் அமைப்புகள் வெளியிட்டுள்ள பிரசாரக் கடிதம் ஒன்றை பலருக்கும் அனுப்பி வருகின்றன.
தமிழர்களே, நாம் ஏன் ஏர் டெல் நிறுவனைத்தை புறக்கணிக்கவேண்டும் என்ற தலைப்பில் துவங்கும் அந்த கடிதத்தில், இலங்கையில் நடந்த போரில், இனவெறி இலங்கை அரசாங்கத்தின் பங்கு மட்டும் அல்ல, அதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவும் இருந்துள்ளது.
ஏனென்றால் தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழில் விருத்தியடைவதற்கு இதுபோன்ற நடைமுறையை பின்பற்றுவது அதிகரித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்திற்கு இந்தியாவில் 12 கோடி முகவர்கள் உள்ளார்கள். அதில் தமிழகத்தில் மட்டும் ஒன்றேகால் கோடி. இலங்கையில் அந்நிறுவனத்திற்கு 12 லட்சம் முகவர்கள் உள்ளனர்.
தன் தொழில் தங்கு தடையின்றி நடைபெறுவதற்கு கூட்டு நிறுவனங்கள் ஒரு பெரும் தொகையை இலங்கை அரசாங்கத்திற்கு கொடுத்துள்ளன. இதில் ஏர்டெல் நிறுவனம் மட்டும் ரூ. 1700 கோடி கொடுத்துள்ளது.
இலங்கை தமிழர்களை அழித்து ஒழிக்க இக்கூட்டு நிறுவனங்கள் பெரும் பங்கு வகித்தது. அதனால்தான் இன்று வடக்கு இலங்கையில் ஆயிரக்கணக்கான காடுகள் அழிக்கப்பட்டு கூட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படுகிறது. எனவே தமிழர்களே ஏர்டெல் நிறுவனத்தை புறக்கணிப்போம் என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன் இது போன்ற குறுஞ்செய்திகளை பலரது செல் போனுக்கும் வந்த வண்ணம் உள்ளது.
மேலும், தங்களது எதிர்ப்பை ஏர்டெல் நிறுவனத்தின் மின்னஞ்சல்களுக்கும் அனுப்பி வருகின்றனர்.