கருணாநிதியை குற்றம் சாட்ட ஜெயலலிதாவுக்கு யோக்கியதை இல்லை-ஆற்காடு வீராசாமி
சென்னை: இன்னமும் நீதிமன்றத்தில் குற்றவாளியாக நின்று கொண்டிருக்கும் ஜெயலலிதாவிற்கு முதல்வர் கருணாநிதியை பற்றி அறிக்கைவிட எந்த யோக்கியதையும் இல்லை என்று கூறியுள்ளார் தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி.
இதுகுறித்து ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவையில் ஜுன் 23 முதல் 27 வரை நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை உலகிலுள்ள அனைத்து தமிழர்களும் பாராட்டி கொண்டிருக்கும் வேளையில், அப்பாராட்டினை தாங்கி கொள்ள முடியாத ஜெயலலிதா, வேண்டுமென்றே கருணாநிதி மீது பழி சுமத்தும் நோக்கத்தோடு "இலங்கை அரசு அப்பாவி தமிழர்கள கொன்று குவிப்பதை கருணாநிதி நியாயப்படுத்துகிறார்'' என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
கருணாநிதி இதுவரை இலங்கை அரசு, இலங்கை தமிழர்களை கொன்றது குறித்து வேதனைபட்டிருக்கிறாரே தவிர, நியாயப்படுத்தியதில்லை. ஜெயலலிதாதான் "போர் நடக்கும்போது, பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது'' என்று தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
ஜெயலலிதா பிரபாகரனை கைது செய்து இந்தியாவிற்குள் கொண்டுவந்து, தண்டிக்க வேண்டுமென்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்ததில் இருந்து, அவர் எல்.டி.டி.ஈ-க்கு எதிரானவர் என்பதை சாதாரணமானவர்கள் கூட புரிந்து கொள்வார்கள்.
இதையெல்லாம் மூடி மறைக்க ஜெயலலிதா இலங்கை அகதி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த தமிழர்களை நேரில் சென்று பார்த்து உண்மைநிலையை மத்திய அரசுக்கும், தலைவர் கலைஞர் அவர்களுக்கும் அறிக்கையை அளிப்பதற்காக அனுப்பப்பட்ட தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சென்றதை, கொச்சைபடுத்தும் வகையில் "உயர்ந்த பரிசு பொருட்களுடன் இந்தியா திரும்பினார்கள்'' என்று பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளார்.
இன்னமும் நீதிமன்றத்தில் குற்றவாளியாக நின்று கொண்டிருக்கும் ஜெயலலிதாவிற்கு கருணாநிதியை பற்றி அறிக்கைவிட எந்த யோக்கியதையும் இல்லை என்று கூறியுள்ளார் வீராசாமி.