நிறுவனங்கள் செலுத்திய நேரடி வரி 15.49 சதவீதம் அதிகரிப்பு
டெல்லி: நாட்டின் தொழில்துறை உற்பத்தி சிறப்பாக இருப்பதால் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனங்கள் செலுத்திய நேரடி வரி வசூல் 15.49 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதன்மூலம் ரூ.68,675 கோடி வரி வசூலாகியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் நேரடி வரி மற்றும் மறைமுக வரி மூலம் மொத்தம் ரூ.7.46 லட்சம் கோடி வருவாய் ஈட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதில், நேரடி வரிகள் வாயிலாக திரட்டப்பட உள்ள தொகை மட்டும் ரூ.4.30 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இது, சென்ற நிதியாண்டை விட 13 சதவீதம் அதிகம்.
ஆண்டின் முதல் காலாண்டில் நேரடி வரி வசூல் 15.49 சதவீதம் அதிகரித்துள்ளதால், நேரடி வரி வசூல் இலக்கை எட்டிவிட முடியும் என்ற நம்பிக்கையில் மத்திய அரசு உள்ளது.
மேலும் இந்த நிதியாண்டில் 3ஜி அலைவரிசை ஒதுக்கீடு வாயிலாக மத்திய அரசுக்கு ரூ.67,720 கோடி வருவாய் கிடைத்தது.
மேலும், வயர்லெஸ் பிராண்ட்பாண்ட் அலைவரிசை ஒதுக்கீடு வாயிலாக ரூ.38,540 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இதன்மூலம் எதிர்பார்க்கப்பட்டதைவிட ரூ.65,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதனால் நாட்டின் நிதிப் பற்றாக்குறையும் ஓரளவு குறையும்.
அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் விலைகள் மீதான கட்டுப்பாட்டை நீக்கியது, சமையல் கேஸ், மண்ணெண்ணெய் விலையை உயர்த்தியது ஆகியவற்றின் மூலம் வருவாய் பற்றாக்குறையும் பெருமளவில் குறையவுள்ளது.
இதனால் பட்ஜெட்டில் விழுந்த பற்றாக்குறையை சமாளிக்க வெளியில் கடன் வாங்குவதையும் மத்திய அரசு பெருமளவில் குறைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.