அரசு மருத்துவமனைகளில் அனைத்துமே பற்றாக்குறை-ஜெ.கண்டனம்-10ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலிருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சைப் பெறக் கூடிய அளவுக்கு சிறப்பு வாய்ந்த மிகப் பெரிய மருத்துவமனையாக சென்னை அரசு பொது மருத்துவமனை விளங்கி வந்தது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த மருத்துவமனையில் தற்போது மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் பெரும்பாலான மருந்து, மாத்திரைகள் இருப்பில் இல்லை என்றும், எலக்ட்ரோ கிரிப் பேண்டேஜ் கடந்த நான்கு ஆண்டு காலமாக வழங்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இதன் விளைவாக, வெளியிலிருந்து பணம் கொடுத்து மருந்து, மாத்திரைகளை வாங்கக்கூடிய நிலைக்கு ஏழை, எளிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், அரசு பொது மருத்துவமனையில் உள்ள மின் தூக்கிகளில் பெரும்பாலானவை, பல மாதங்களாக இயங்கவில்லை என்றும், இதன் காரணமாக நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்றும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
இது தவிர, நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட பயோ கழிவுகள் மருத்துவமனையின் பின்புறம் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, மருத்துவமனையே புதிய நோய்க் கிருமிகள் உருவாகும் இடமாக மாறியுள்ளதுடன், இந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசும் பகுதியாகவும் மாறிவிட்டது.
இது மட்டுமல்லாமல், அரசு பொது மருத்துவமனையில் இதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் ஆஞ்சியோகிராம் கருவி கடந்த ஆறு மாத காலமாக செயல்படாத நிலையில் உள்ளதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன.
ஆனால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இதைவிட மோசமான சூழ்நிலை நிலவுகிறது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களும், ஊழியர்களும் இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும், அவசர சிகிச்சைப் பிரிவு இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும், கழிவறைகள் சரியாக பராமரிக்கப்படாததன் காரணமாக மருத்துவமனையே சுகாதாரமற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அரசால் வாங்கப்பட்ட 50 கணினிகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட குளிர்சாதன இயந்திரங்கள் இயங்கவில்லை என்றும் தகவல்கள் வருகின்றன. மருத்துவர்கள் பற்றாக்குறை, ஊழியர்கள் பற்றாக்குறை, மருந்து மாத்திரைகள் பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக நோயாளிகள் உயிரிழக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டு உள்ளது. நோயைத் தீர்த்துக் கொள்ள மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் கூடுதலாக புதிய நோய்களை பெறக்கூடிய அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். நோயாளிகளுக்குத் துணையாக மருத்துவமனைக்குச் செல்பவர்களும் புதிய நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி, அதிமுக சார்பில், 10.7.2010 சனிக்கிழமை அன்று சென்னை பார்க் டவுன் தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.