சென்னை: லண்டனைச் சேர்ந்த இலங்கை தமிழரை கடத்தி ரூ.17.5 லட்சம் பறித்த கும்பல் கைது
சென்னை: லண்டனிலிருந்து சென்னை வந்த இலங்கை தமிழரை கடத்திச் சென்று ரூ.17.5 லட்சம் பணத்தைப் பறித்த கும்பல் பிடிபட்டது.
இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை தமிழரான சண்முகவேலின் (36) மனைவி ராதிகா சென்னையைச் சேர்ந்தவர் ஆவார்.
இந் நிலையில் கடந்த 5ம் தேதி பல்லாவரம் போலீசில் சண்முகவேல் ஒரு புகார் மனு தந்தார். அதில், கடந்த மாதம் 22ம் தேதி காரில் திருவல்லிக்கேணிக்கு சென்று கொண்டிருந்த போது ஆட்டோவில் வந்த சிலர் என்னை வழி மறித்து கடத்திச் சென்று ஒரு வீட்டில் 2 நாட்கள் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டினர்.
போலீசிடம் சொன்னால் கொலை செய்வோம் என்று மிரட்டியதால் என் மனைவி ரூ.17.5 லட்சத்தை அந்த கடத்தல் கும்பலுக்குக் கொடுத்து என்னை மீட்டார்.
கடத்தல் கும்பல் என்னை தாக்கி கையை உடைத்துவிட்டது. அந்தக் கும்பலைப் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின் பேரில், மீனம்பாக்கம் உதவி கமிஷனர் குப்புசாமி, பல்லாவரம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், ஆல்பின்ராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்தப் படையினர் நடத்திய விசாரணையில், சண்முகவேல் லண்டனில் இன்னொரு இலங்கை தமிழரான பாலா என்பவருடன் சேர்ந்து தொழில் செய்து வந்ததும், அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும்,
இதையடுத்து பாலா சென்னையில் உள்ள தன் நண்பர் சிவா என்பவருடன் சேர்ந்து சண்முகவேலை கடத்தி ரூ.25 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதும், பின்னர் பல்லாவரத்தில் வைத்து சண்முகவேல் மனைவியிடம் இருந்து ரூ.17.5 லட்சத்தை பெற்றுக் கொண்டு அவரை விடுவித்ததும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து கடத்தல் கும்பலுக்கு வலை வீசப்பட்டது.
இதற்கிடையே போலீசார் பல்லாவரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஒரு காரில் வந்த 4 பேர் போலீசாரை பார்த்தவுடன் காரை விட்டு இறங்கி தப்பியோடினர். போலீசார் விரட்டிச் சென்று 4 பேரையும் மடக்கினர்.
காரில் இருந்த கத்திகள், உருட்டுகட்டைகள் மற்றும் ரூ.9 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்கள் ஜனார்த்தனம் (30), சீனிவாசன் (28), சுரேஷ் (29), பாஸ்கர் (31) என்று தெரிய வந்தது. இவர்கள் தான் சண்முகவேலை கடத்தியவர்கள் என்றும் தெரியவந்தது.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பாலா, சிவா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications