உத்தபுரம் தலித் பிரச்சனை-கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவிப்பு
மதுரை: மதுரை அருகே உள்ள உத்தபுரத்தில் வாழும் தலித் மக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி. சம்பத், பொதுச் செயலாளர் கே. சாமுவேல் ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய போராட்டங்களின் காரணமாக தமிழக அரசு தலையிட்டு தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி உடைக்கப்பட்டு பொது பாதை உருவாக்கப்பட்டது.
ஆனால், தற்போது அந்த பொது பாதையில், தலித் மக்கள் எந்த வாகனத்திலும் செல்லக் கூடாது என ஆதிக்க சக்திகள் தடை விதித்துள்ளன. இந்த தடையை அங்குள்ள காவல்துறையே முன்னின்று அமல்படுத்திக் கொண்டிருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முதல்வரே உத்தப்புரம் உத்தமபுரமாக வேண்டும் என சட்டமன்றத்தில் பேசினார். ஆனால் இந்த மூன்று ஆண்டு காலத்தில் அதற்கான உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்ளவில்லை.
மேலும் அந்த கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவில் அரச மர வழிபாடு தலித் மக்களின் பாரம்பரியமான வழிபாட்டு உரிமையாகும். ஆனால், தலித் மக்களை மிரட்டி அவர்களின் வழிபாட்டு உரிமையை ஆதிக்க சக்திகள் பறித்துள்ளது.
தலித் மக்கள் குடியிருப்புப் பகுதியிலிருந்து அந்தக் கோவிலுக்குச் செல்லும் பாதையை சுவர் வைத்து அடைத்துக் கொண்டனர். இந்த செயலுக்கு, தமிழக அரசு நிர்வாகமும் துணை போவது வேதனை தருகின்றது.
உத்தப்புரம் தலித் மக்களுக்கு பேருந்து நிறுத்த நிழற்குடை அமைத்துத் தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக வற்புறுத்தி வந்த போதிலும், இன்று வரை அந்த கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை.
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் ஒரு ஆண்டு முன்னதாகவே இதற்காக ரூ. 3 லட்சம் நிதி ஒதுக்கியும், இந்த நிதியைக் பயன்படுத்த முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது வருத்தம் அளிக்கின்றது.
உத்தரபுரத்தில், காவல்துறை நடத்திய தாக்குதல் கண்டனத்திற்குரியது என்று கூறியதோடு, ரூ. 10 லட்சம் நிவாரணம் தர வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தும் கூட காவல்துறையின் அணுகுமுறையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.
தற்போது கூட உத்தப்புரம் தலித் மக்கள் தலைவர்கள் பொன்னையா, சங்கரலிங்கம் உள்பட 11 பேர் 3 வார காலமாக மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறைவாசத்திற்குப் பிறகு அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தபோது, ஜோடிக்கப்பட்ட பழைய வழக்குகளை காரணம் காட்டி நீதிமன்ற வளாகத்திலேயே அவர்களை மீண்டும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உத்தப்புரம் தலித் மக்களின் சட்ட பூர்வமான அடிப்படை பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவோ, காவல்துறை அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்தவோ தமிழக அரசு முன்வரவில்லை.
மேலும், இந்த கிராம தலித் மக்களுக்கு இதர மனித உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படு வருகின்றது.
இந்த நிலையில் உத்தப்புரம் தலித் மக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வரும் ஜூலை 12-ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிடும் பேராட்டம் டி.கே.ரங்கராஜன் எம்.பி தலைமையில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.