ஆகஸ்ட் 1ம் தேதி முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக்!
இது குறித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா சென்னையில் நிருபர்களிடம் பேசுகையி்ல்,
தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையை கருதி பெட்ரோலிய துறை, தனியார் துறை ஆகியவை பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை தன்னிச்சையாக உயர்த்தி கொள்ள மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது. இதனால் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயரும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வரியை (டோல்) 5 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் உயர்த்தவேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் இந்த விதிமுறைகளுக்கு மாறாக வருடம் வருடம் உயர்த்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒரு நாளைக்கு ஒரு லாரி மட்டும் ரூ. 1,000 வரை சுங்க வரி கட்டவேண்டிய நிலை உள்ளது. ஒரு வருடத்திற்கு ரூ.3 முதல் ரூ.4 லட்சம் வரை சுங்க வரி கட்டவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கடுமையான வரி விதிப்பை 45 நாட்களுக்குள் தளர்த்துமாறு மத்திய அரசுக்கு கோரிக்கையும் கெடுவும் வைத்தோம். ஆனால், மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.
எனவே வரும் ஆகஸ்ட் 1ம் தேதி நள்ளிரவு முதல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து லாரி, வேன் மற்றும் அனைத்து கனரக வாகனங்களும் நிச்சயமாக ஓடாது. வட இந்திய மாநிலங்களில் உள்ள அனைத்து லாரிகளும் 1ம் தேதி நள்ளிரவு முதல் தென் மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார் சண்முகப்பா.