அவசரப்பட்டு ஐ.நா.அலுவலகத்தை மூடியுள்ளார் பான் கி மூன்-இலங்கை
இலங்கை போர்க்குற்றம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் நியமித்துள்ள ஐ.நா. குழுவை கண்டித்து கொழும்பில் சிங்களர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரும் ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து ஐ.நா. அலுவலகத்தை மூட பான் கி மூன் உத்தரவிட்டார். கொழும்புக்கான ஐ.நா. பிரதிநிதியான நீல் பூனேவும் திரும்பப் பெறப்பட்டு விட்டார்.
இதனால் இலங்கைக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நிலைமை மேலும் சிக்கலாகுமோ என அது அஞ்சுகிறது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ் கூறுகையில், அவசர கோலத்தில் பான் கி மூன் செயல்பட்டுள்ளார். நீல் பூனேவை திரும்பப் பெற்றிருப்பது துரதிர்ஷ்டவசமானது.
பூனேவை ஆலோசனைக்காக நியூயார்க் வரவழைத்துள்ளார் பான் கி மூன். இது எதிர்பாராதது, துரதிர்ஷ்டவசமானது. அவசர கோலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என்பதை தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை என்றார்.