மீனவர்கள் மீதான தாக்குதல் கருணாநிதி கடிதத்திற்கு பிரதமர் பதிலில்லை-சிதம்பரம் பதில்
சென்னை: இலங்கைக் கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருவதை தடுத்து நிறுத்துங்கள் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங், பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதத்திற்கு பிரதமர் பதிலளிக்கவில்லை. மாறாக, ப.சிதம்பரத்தை விட்டு மத்திய அரசு பதிலளித்துள்ளது. அதுவும் நாலே வரிகளில்.
இலங்கை கடற்படை காடையினரால் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.
இந்தக் கடிதத்திற்கு பிரதமரிடமிருந்து இதுவரை பதில் அனுப்பப்படவில்லை. மாறாக மத்திய அரசு சார்பில் என்ற பெயரில் ப.சிதம்பரத்திடமிருந்து ஒரு பதில் கடிதம் முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், தங்கள் கடிதம் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரிடம் எடுத்துரைத்து விரிவாக விவாதித்திருக்கிறேன். இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம் இலங்கை அரசுடன் பேசி இப்பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்கும் என்று சுருக்கமாக தெரிவித்துள்ளார் சிதம்பரம்.
முதல்வர் கடிதம் எழுதும்போதெல்லாம் வழக்கமாக இதுபோலத்தான் மத்திய அரசு பதிலளிக்கும். மாறாக இலங்கைத் தூதரை வரவழைத்து கடும் கண்டனம் தெரிவிப்பதோ, இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதோ, இந்திய கடற்படையினர், கடலோரக் காவல் படையினரை கொண்டு தீவிர விசாரணை நடத்துவதோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் ஏ.கே.அந்தோணி தலைமையிலான பாதுகாப்புப் படையினர் பெருத்த அலட்சியப் போக்குடன் நடந்து வருவதும் சுட்டிக்காட்டத்தக்கது.