For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மின்னணு எந்திரத்தை தவிர்க்க 70 வேட்பாளர்களை களமிறக்கிய டிஆர்எஸ்!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திராவின் தெலுங்கான பகுதியில் 11 சட்டசபை தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் 70 பேருக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், அங்கு மீண்டும் வாக்கு சீட்டை பயன்படுத்தி ஓட்டுப் பதிவு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளாக முழுக்க முழுக்க மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தியே தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், இதில் முறைகேடுகள் நடப்பதாகவும், இதனால் தான் தாங்கள் தோற்று வருகிறோம் என்றும், மீண்டும் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என்றும் அதிமுக, பாமக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன.

இந் நிலையில் ஆந்திராவில் காலியாக உள்ள 12 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் 10 தொகுதிகள் தெலுங்கானா பகுதியில் உள்ளன.

இங்கு ஓட்டுச் சீட்டை பயன்படுத்தி தேர்தல் நடத்துமாறு சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கோரியது. ஆனால் அந்தக் கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்துவிட்டது.

இதையடுத்து, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஒரு திட்டம் வகுத்தது. ஓட்டுப்பதிவு எந்திரங்களில் அதிகபட்சமாக 64 வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்களே மட்டுமே இடம்பெற முடியும். 64 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால், ஓட்டுச் சீட்டை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தேர்தல் கமிஷன் தள்ளப்படும் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி கணக்கு போட்டது.

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று ஏராளமான சுயேச்சைகளை அந்தக் கட்சியே களத்தில் இறக்கி மனு தாக்கல் செய்ய வைத்துள்ளது.

இதனால் இடைத்தேர்தல் நடைபெறும் 12 தொகுதிகளில், 11 தொகுதிகளில் 70க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கலாகியுள்ளன. எனவே, 11 தொகுதிகளிலும் ஓட்டுச் சீட்டை பயன்படுத்தி தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், ஒருமுறை இதை அனுமதித்துவிட்டால் தமிழகம் போன்ற மாநிலங்களில் தோற்கும் நிலையில் உள்ள கட்சிகள் பணத்தை செலவிட்டு சுயேச்சைகளைக் களத்தில் இறக்கி தேர்தலையே குழப்பலாம் என்பதால், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் ரகசிய திட்டத்தை முறியடிக்க தேர்தல் ஆணையமும் திட்டம் வகுத்து வருகிறது.

இதன்படி 70 வாக்காளர்களுக்கு மேல் இருக்கும் தொகுதிகளில் 2 மின்னணு எந்திரங்களை வைத்து தேர்தல் நடத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இது முதல் வெற்றி-சந்திரசேகர ராவ்:

இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், எங்கள் கட்சிக்கு மின்னணு எந்திர ஓட்டுப்பதிவில் சிறிதும் நம்பிக்கையில்லை. அதில் முன்கூட்டியே பதிவு செய்யும் வசதி இருப்பதாக கூறப்படுவதால் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்துமாறு கூறுகிறோம்.

எந்திர வாக்குப்பதிவில் ஒரு வாக்காளர் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டோம், தான் போட்ட ஓட்டு தனது கட்சிக்குதான் விழுந்துள்ளதா என்பதை உறுதியாக தெரிந்து கொள்ள முடியாது.

ஆனால் வாக்குசீட்டு முறையில் தான் போட்ட ஓட்டு தனது கட்சிக்கு விழுந்திருக்கிறது என்பதை உறுதியாக அறிந்து கொள்ள முடியும். எந்திர வாக்குப்பதிவில் தில்லுமுல்லு செய்ய முடியும். எனவே தான் அதை காங்கிரஸ் கட்சி அதை ஆதரிக்கிறது.

வாக்குச்சீட்டு முறையில் ஓட்டுப்பதிவு நடத்துவதற்கு தான் நாங்கள் 64க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை ஒவ்வொரு தொகுதியிலும் களம் இறங்கினோம். இதனால் வாக்குச்சீட்டு முறையில் இடைத்தேர்தல் நடத்தப்படும். இது தெலுங்கானா கட்சிக்கு இடைத்தேர்தலில் கிடைத்துள்ள முதல் வெற்றி என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X