ஆந்திர இடைத் தேர்தல்-213 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு-டிஆர்எஸ் திட்டம் அம்பேல்
ஹைதராபாத்: பெருமளவில் சுயேச்சை வேட்பாளர்களை களம் இறக்கி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்த விடாமல் தடுக்க முயன்ற தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் திட்டம் புஸ்வானமாகியுள்ளது.
தெலுங்கானா பகுதியில் உள்ள 12 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஜூலை 27ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.இத்தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்துமாறு கோரியது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி. ஆனால் அதை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.
இதையடுத்து வித்தியாசமான முறையில் யோசித்த அந்தக் கட்சி தனது தரப்பு ஆட்களையே சுயேச்சை வேட்பாளர்களாக ஒவ்வொரு தொகுதியிலும் பெருமளவில் மனுத் தாக்கல் செய்யவைத்தது.
இதையடுத்து அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் சுயேச்சை வேட்பாளர்கள் போல 12 தொகுதிகளிலும் சரமாரியாக மனு தாக்கல் செய்தனர். இதனால் வேட்பு மனுத் தாக்கலின் இறுதியில், 926 பேர் மனு தாக்கல் செய்து தேர்தல் ஆணையத்தை அதிர வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. அப்போது 213 வேட்பு மனுக்கள் முறையாக இல்லை என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து இறுதிக்கட்டமாக தற்போது 713 பேர் களத்தில் உள்ளனர்.
இதன் மூலம் வெமுலவாடா (42 வேட்பாளர்கள்), சித்திப்பேட்டை (45), மன்செரியல் (49), சிர்பூர் (55), சென்னுரு (60), தர்மபுரி-தனி (61), கொர்துலா (68) ஆகிய தொகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர வாக்குப்பதிவு உறுதியாகியுள்ளது.
அதிகபட்ச வேட்பாளர்கள் நிற்கும் வாரங்கல் மேற்கு (93), சிர்சில்லா (79), எல்லாரெட்டி (75), ஹுஸூராபாத் (72) ஆகிய தொகுதிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட எந்திரங்களைப் பயன்படுத்தக் கூடும் எனத் தெரிகிறது.
213 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதன் மூலம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் திட்டம் குறைந்தது 7 தொகுதிகளில் நிறைவேறாமல் போயுள்ளது.