திமுக வேலைவாய்ப்பு முகாம்களால் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு-கனிமொழி
பாளையங்கோட்டை தொகுதியில் நடந்த வேலைவாய்ப்பு பயிற்சி முகாமை துவக்கி வைத்து கனிமொழி எம்.பி. பேசுகையில்,
ஒரு காலத்தில் சில சமூகத்தை சேர்ந்தவர்கள் சில ஜாதியை சேர்ந்தவர்களை தவிர பிறருக்கு படிப்பு எதற்கு, பெண்களுக்கு கல்வி எதற்கு என்ற நிலை இருந்தது. கல்விக்காக விதையிட்டு சமூக புரட்சி செய்தவர் பெரியார். அந்த விதையை பாதுகாத்து வளர்த்தவர் அண்ணா. அந்த மரம் நிழல் தரும் தருவாக இருக்கிறது. அதற்கு காரணம் முதல்வர் கருணாநிதி.
எனவே, அவருக்கு பிறந்த நாள் பரிசாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு ரூ. 40 ஆயிரம் கோடி முதலீடு வந்துள்ளது. வேலை தேடுவோர் அதிகம். ஆனால் வாய்ப்புகளோ குறைவு. வேலை வாய்ப்பு மூகாம் மூலம் இதுவரை 1 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
இதில் சிபாரிசுகளுக்கு இடமில்லை. கடந்த ஆட்சியாளர்கள் வேலையில் இருந்தவர்களை வீட்டுக்கு அனுப்பினார்கள். அவர்களுக்கும் வேலைவாய்ப்பு அளித்து புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி திமுக அரசு சாதனை படைத்துள்ளது.
முதல்வர் கருணாநிதி தனது வாழ்வில் தோல்விகளை சந்தித்த போதிலும் துவண்டுபோனதில்லை. எதிர்கட்சியாக இருந்தபோதிலும் மக்களை விட்டு செல்லவில்லை. கொடநாடு, ஏற்காடு, ஏலகிரிக்கு ஓடிப் போகவில்லை. எனவே எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் பாங்கோடு நேர்முக தேர்வுக்கு வாருங்கள் என்றார் கனிமொழி.
தாத்தா-பாட்டி சிலைக்கு அஞ்சலி
இதையடுத்து ராதாபுரம் புதிய பஸ்ஸ்டாண்டில் உள்ள தனது தாத்தா, பாட்டியான முத்துவேலர்-அஞ்சுகத்தம்மாள் முழு உருவ சிலைக்கு கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அவருடன் அமைச்சர்கள் மைதீன்கான், பூங்கோதை, எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் வந்திருந்தனர்.