சுத்திகரிக்காத சாய நீரை திருமணிமுத்தாறில் கலந்த லாரி மடக்கி பிடிப்பு
சேலம்: சாயப்பட்டறை கழிவுநீரை சுத்திகரிக்காமல், திருமணிமுத்தாற்றில் கலந்த டேங்கர் லாரியை மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.
சேலம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏராளமான சாயப்பட்டறைகள் உரிய சுத்திகரிப்பு வசதிகள் இன்றி இயங்கி வருகின்றன.
இவை சாயக்கழிவை சுத்திகரிக்காமல் நேரடியாக கால்வாய் மற்றும் திருமணிமுத்தாற்றில் கலக்கும் பாதக செயலை செய்து வருகின்றது என்றும், இதனால், நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடந்த பல மாதங்களாக புகார் கூறிய வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், சில சாயப்பட்டறைகள் தங்களது சாயக்கழிவு நீரை டேங்கர் லாரிகள் மூலம் திருமணி முத்தாற்றில் கொட்டி வந்தனர்.
இது குறித்து சேலம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் அலுவகத்திற்கு பொது மக்கள் ரகசிய தகவல் அளித்தனர்.
இதனையடுத்து, சேலம் மாசுக்கட்டுப்பாட்டு பொறியாளர் தங்கபாண்டியன் உத்தரவின்பேரில் உதவி பொறியாளர் மணிமாறன் திருமகள் பை-பாஸ் அருகில் திடீர் என்று ரெய்டு நடத்தினார். அப்போது அர்த்தனாரி கிளாத்திங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான டேங்கர் லாரியில் சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு நீரை கொண்டு வந்து திருமணி முத்தாற்றில் கலந்து கொண்டிருக்கும்போது அதிகாரிகள் அந்த லாரியை மடக்கி பிடித்தனர்.