இலங்கை கடற்படை மீண்டும் வெறிச் செயல்:50 தமிழக மீனவர்கள் படுகாயம்!
இந்த தாக்குதல் சம்பவத்தை தமிழக மீனவளத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் இன்று கூறுகையில், ராமேஸ்வரத்திலிருந்து 130 படகுகளில் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.
கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு எட்டு ரோந்துப் படகுகளில் இலங்கைக் கடற்படையினர் வந்து சுற்றி வளைத்துள்ளனர். மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் மீனவர்கள் வைத்திருந்த ஜிபிஎஸ் சாதனங்கள், விலை உயர்ந்த மீன்கள் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.
50 பேர் வரை காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.
மீனவர்கள் சங்கத் தலைவர் ஜேசு கூறுகையில், ஒவ்வொரு படகு உரிமையாளருக்கும் இந்த தாக்குதல் காரணமாக ரூ. 20,000 முதல் ரூ.30,000 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.