சேது திட்டம்: வேதாரண்யம் கடலில் புதிய ஆய்வுக் கருவி
வேதாரண்யம்: வேதாரண்யம் கடல் பகுதியில் சேதுக் கால்வாய் திட்டப் பணிகளுக்காக கடல் சூழலைக் கண்டறிய பொருத்தப்பட்டிருந்த ஆய்வுக் கருவி மாயமானதையடுத்து அங்கு புதிய கருவி நிறுவப்பட்டுள்ளது.
சேதுக் கால்வாய் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் கடல் பரப்பில் கடலின் சூழல் குறித்த ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோடியக்கரை, தனுஷ்கோடி, பாம்பன், கோட்டைப்பட்டினம், மன்னார் வளைகுடா உள்ளிட்ட 8 மையங்களில் கொச்சி தேசிய கடல் ஆராய்ச்சி மையம் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
நாகப்பட்டிணம் மாவட்டம் கோடியக்கரை கடலில் ரூ. 30 லட்சம் செலவில் ஆய்வுக் கருவி நிறுவப்பட்டது. வேதாரண்யம் சன்னதி கடல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இந்தக் கருவி மூலம் கடல் நீரோட்டத்தின் வேகம், திசை வேகம், உப்புத் தன்மை, தட்ப வெப்பம் ஆகியவை கண்காணிக்கப்பட்டு வந்தன.
இந் நிலையில் இந்தக் கருவி திடீரென மாயமானது. இதையடுத்து ரூ. 19 லட்சத்தில் புதிய கருவி நேற்று நிறுவப்பட்டது.
ஆறுகாட்டுத்துறையிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் கடலுக்குள் மிதவை மீது இந்தக் கருவி நிறுவப்பட்டுள்ளது.